
சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள உணவகம் ஒன்றில் பிரியாணி தீர்ந்து போய்விட்டதாக கூறிய கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கிய 11 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட இருவரை திமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவித்துள்ளார்.
சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலையில் உள்ள சேலம் ஆர்.ஆர். அன்பு உணவகத்திற்கு கடந்த திங்கள்கிழமை இரவு அப்பகுதியைச் சேர்ந்த திமுகவைச் சேர்ந்த யுவராஜ் என்பவர், தனது ஆதரவாளர்களுடன் சென்றுள்ளார். அவர்கள் அனைவரும் குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பிரியாணி தீர்ந்து போய்விட்டதாக கூறிய கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அது தற்போது வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை தெற்கு மாவட்டம், விருகம்பாக்கம் வடக்கு பகுதியைச் சேர்ந்த யுவராஜ், திவாகர் ஆகியோர் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைக்கப்பட்டுள்ளார் என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பாக மா.சுப்பிரமணியன் கூறுகையில், அவர்கள் இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இந்து முன்னணியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தனர். அவர்கள் திமுக உறுப்பினர்களாகத்தான் இருந்தனர். எந்த பொறுப்பிலும் இல்லை. இதுபோன்ற செயல்களில் யார் ஈடுபட்டாலும் ஏற்கக் கூடியது அல்ல. ஆகையால் அவர்கள் மீது கட்சி நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.