
தர்மபுரி அருகே, பத்தாம் வகுப்பு வரை மட்டும் படித்துவிட்டு அலோபதி சிகிச்சை அளித்து வந்த போலி பெண் மருத்துவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள பாளையத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மனைவி அனிதா (47). இவர், 10-ம் வகுப்பு படித்துவிட்டு பஞ்சப்பள்ளி, பாளையம் சுற்றுவட்டார கிராமங்களில் ஆங்கில மருத்துவம் பார்த்து வருவதாக பஞ்சப்பள்ளி காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில், காவல்துறையினர் அனிதாவிடம் நேரில் விசாரணை நடத்தினர். அவர் பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருப்பதும், எம்பிபிஎஸ் படிக்கவில்லை என்பதும், கிராம மக்களுக்கு ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்ததும் தெரிய வந்தது. இதைடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
அவருடைய வீட்டில் நடத்திய சோதனையில் ஆங்கில சிகிச்சைக்கான ஏராளமான மருந்து, மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அதன்பிறகு, அனிதாவிற்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு நோய்த்தொற்று இல்லை என்பது தெரிய வந்ததை அடுத்து, சேலம் பெண்கள் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டார்.