![Consolidation of tender rigging case against EPS](http://image.nakkheeran.in/cdn/farfuture/OYdqW4lH8H-k8LzySCxyLPlm0Bh28OazS2TsBxT-pY4/1695023215/sites/default/files/inline-images/885_12.jpg)
எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்த போது, நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்கள் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதில் 4,800 கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், இது தொடர்பாக, லஞ்ச ஒழிப்புத்துறையிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, வழக்கு தொடர்ந்திருந்தார்.
உச்சநீதிமன்றம் வரை சென்ற வழக்கை உயர்நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து, ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்ப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை சார்பாக மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலும், பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரமும் ஆஜராகினர். இதில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை சார்பாக கபில் சிபில் ஆஜரானதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக ஆட்சியில் இல்லாதபோது திமுக சார்பாக இந்த வழக்கில் கபில் சிபில் ஆஜராகினார். தற்போது தமிழக லஞ்ச ஒழிப்பு சார்பாகவும் கபில் சிபில் ஆஜராகினால், எப்படி இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதாடினார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கைப்பற்றி எங்களுக்கு முழுவதும் தெரியாது என்று கூறிய நீதிபதிகள் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.