Skip to main content

 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்; முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

Published on 08/10/2024 | Edited on 08/10/2024
 CM M. K. Stalin's Appointed of responsible ministers for districts

செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து தமிழக அமைச்சரவையில் மாற்றம் கொண்டுவரப்பட்டு சில அமைச்சர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டனர். மேலும் அமைச்சர்களின் துறைகளும் சிலருக்கு மாற்றம் செய்யப்பட்டிருந்தது. அதேபோல் ஜாமீனில் வெளியே வந்திருந்த செந்தில் பாலாஜிக்கு அமைச்சரவையில் மீண்டும் இடம் கொடுக்கப்பட்டிருந்தது. தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அமைச்சரவை மாற்றத்திற்கு பின்பு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (08-10-24) காலை 11 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் கூடியது. அப்போது, தமிழ்நாட்டில் மாவட்ட வளர்ச்சிப் பணிகளைத் துரிதப்படுத்தவும், பொது மக்களுக்குச் சென்றடைய வேண்டிய நலத்திட்ட உதவிகளைக் கண்காணிக்கவும், இயற்கைச் சீற்றம், நோய்த்தொற்று இன்னபிற நேரங்களில் அவசரகாலப் பணிகளைக் கூடுதலாக மேற்கொள்ளவும், பொறுப்பு அமைச்சர்களை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நியமித்துள்ளார். அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்திற்கு நகராட்சி நிருவாகத் துறை அமைச்சர்  கே.என். நேரு, தேனி மாவட்டத்திற்கு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, திருப்பத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களுக்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு ஆகியோரை நியமித்துள்ளார்.

மேலும், தருமபுரி மாவட்டத்திற்கு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தென்காசி மாவட்டத்திற்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்  தங்கம் தென்னரசு, நீலகிரி மாவட்டத்திற்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் ஆகியோரை நியமனம் செய்துள்ளார். 

கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி, கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி, பெரம்பலூர் மாவட்டத்திற்கு போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மயிலாடுதுறை மாவட்டத்திற்கு பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை அமைச்சர்  சிவ.வீ. மெய்யநாதன் ஆகியோரை நியமித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

சார்ந்த செய்திகள்