திண்டுக்கல் மாவட்டத்திலையே ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிதான் விவசாயிகள் நிறைந்த பூமியாக இருந்து வருகிறது. இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் மக்காசோளம், முருங்கை, கண்வல்லி கிழங்கு, தக்காளி, மொச்சை, மிளகாய், வெங்காயம், பாசிபயிறு, சோளதட்டை, வெண்டைக்காய் உள்பட பல விவசாய பொருட்களை பயிரிட்டு எடுத்து வந்து தமிழகத்திலேயே இரண்டாவது காய்கறி மார்க்கெட்டான ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு அனுப்பி வைத்து விற்பனை செய்து வயிற்றை கழுவி வருகிறார்கள்.

இந்தநிலையில் திடீரென ஏற்பட்ட கஜா புயலால் பொருளூர், தேவத்தூர், சத்திரப்பட்டி, விருப்பாச்சி, மஞ்சநாயக்கன்பட்டி, கணக்கம்பட்டி, லக்கையன்கோட்டை, நால்ரோடு, இடையகோட்டை, கள்ளிமந்தையம், அம்பிளிக்கை உள்பட 50-க்கு மேற்பட்ட ஊர்களில் விவசாயம் செய்து இருந்த பயிர்வகை விவசாயங்களும், பயிருக்காக அமைக்கப்பட்ட பந்தலும் கஜாபுயலின் கோரதாண்டவத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாய்ந்தது.
அதுபோல் வாழை, தென்னை,சோளம்,மாட்டுதீவனத்திற்கு போடப்பட்ட தட்டைகள் உள்பட பெரும்பாலான விவசாயமும் பெரும்சேதம் ஏற்பட்டு சாய்ந்தும்,மண்ணோடுமண்ணாகவும் விழுந்து விட்டதை கண்டு விவசாயிகள் மனம் நொந்து போயுள்ளனர். இப்படி கஜா புயலால் தொகுதியில் உள்ள விவசாய மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்ற தகவல் ஆளும் கட்சியினருக்கும், மாவட்டநிர்வாகத்திற்கும் தெரிந்தும் மெத்தன போக்கவே கடைபிடித்து வந்தனர்.
ஆனால் தொகுதி திமுக எம்எல்ஏவும் கொறடாவும்மான சக்கரபாணியோ உடனே கஜா புயலால் பாதிக்கப்பட்டு வீடு வாசலை இழந்து நிற்கும் மக்களுக்கு ஆறுதல் கூறி தன்னால் முடிந்த முதல் உதவிகளை செய்துவிட்டு இரவு பகல் பாராமல் விவசாயிகளை சந்தித்ததுடன் மட்டுமல்லாமல் சேதம் அடைந்த விளைநிலங்களுக்கு பாதிக்கப்பட்ட விவசாயிகளுடன் சென்று அந்த பயிர்களை பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி நிவாரண நிதி உதவிகள் வாங்கி தருவதாக உறுதி கூறியும் வருகிறார்
இதுபற்றி ஒட்டன்சத்திரம் சட்டமன்ற மன்ற உறுப்பினரும், கொறடாவுமான சக்கரபாணியிடம் கேட்ட போது......
இந்த கஜா புயலால் மக்காசோளம் பயிர்கள்தான் பெரும்பான்மையாக சேதம் அடைந்துள்ளது. அதுவும் இந்த பயிரில் படைப்புழு தாக்கியதால் அதை ஒழிக்க ஒவ்வொரு விவசாயியும் பல ஆயிரங்கள் செலவு செய்து நான்கு முறை மருந்து அடித்து பயிர்களை காப்பாற்றி வந்த நேரத்தில்தான் இந்த புயலால் அந்த மக்காசோளம் பயிர்கள் சாய்ந்து விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே இந்த அரசு உடனடியாக ஒரு ஏக்கருக்கு 25 ஆயிரமும், தென்னை மற்ற விவசாய பயிர்களின் தன்மையை பொருத்து இழப்பீடு தொகையை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் (வினைய்)கோரிக்கை மனு கொடுத்து அசுர வேகத்தில் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருக்கிறேன் என்று கூறினார்.