Skip to main content

இனி வாரத்தில் 6 நாட்கள் பல்கலை, கல்லூரிகளில் வகுப்புகள் நடக்கும்! உயர்கல்வித்துறை உத்தரவு!!

Published on 24/11/2021 | Edited on 24/11/2021

 

Classes are now held 6 days a week at universities and colleges! Higher Education Order !!

 

தமிழ்நாட்டில் கரோனா தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் வந்ததையடுத்து, இனி அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளிலும் வாரத்தில் 6 நாட்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்த உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது, "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவியதால் கல்லூரிகள் மூடப்பட்டிருந்த நிலையில், செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கல்லூரிகளில் சுழற்சி முறையில், அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. 

 

தற்போது இந்த உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, அனைத்து மாநில பல்கலைக்கழகங்கள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள், சுயநிதி கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் வாரம் 6 நாட்கள் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. 

 

இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் உயர்கல்வித்துறை அதிகாரிகள், பல்கலைக்கழகங்கள், மாணவர்கள் அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர். 

 

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, தற்போதைய செமஸ்டருக்கான வகுப்புகள் வாரத்தில் 6 நாட்கள் நேரடியாக நடத்த வேண்டும். ஜனவரி 20ஆம் தேதிக்குப் பிறகு செமஸ்டர் தேர்வுகள் நடக்க உள்ளன. 

 

எனவே, செமஸ்டர் தேர்வுகள், இறுதித் தேர்வுகளுக்கு முன்பாக மாதிரி தேர்வுகள் நடத்தப்பட வேண்டும். தேர்வுக்கு மாணவர்கள் தயாராவதற்கு வசதியாக பாடத்திட்டங்களை வழங்க வேண்டும். பாடத்திட்டங்களின்படி பாடங்களை நடத்தி முடித்த கல்லூரிகளில் திரும்பவும் வகுப்புகள் நடத்த வேண்டும். 

 

குறிப்பாக ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தியிருந்தால் திரும்பவும் நேரடி வகுப்புகள் நடத்த வேண்டும் என்று முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. 

 

தொழில்நுட்பக் கல்வி இயக்குநர், கல்லூரிக்கல்வி இயக்குநர் ஆகியோர் தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு இதுகுறித்து தெரிவிக்க வேண்டும். கல்லூரிகள், வாரத்தில் 6 நாட்கள் நடக்கிறதா என்றும், ஆசிரியர்கள் வருகை புரிந்துள்ளனரா என்றும் கண்காணிக்க வேண்டும். 

 

அனைத்துப் பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள், தேர்வுகள் குறித்தும் ஏற்கனவே உள்ள தேதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் குறித்தும் உறுதிசெய்துகொள்வதுடன், மாற்றம் செய்யப்பட்ட அட்டவணையை அனுப்பிவைக்க வேண்டும். 

 

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்தும் மேற்சொன்ன உத்தரவின்படி செயல்படுகின்றனவா என்று மாவட்ட ஆட்சியர்கள் கண்காணித்து உறுதிசெய்ய வேண்டும்." இவ்வாறு உயர்கல்வித்துறைச் செயலாளர் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

என்னதான் நடக்கிறது அமெரிக்காவில்?; தொடரும் இந்திய மாணவர்களின் மர்ம மரணம்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 Continued incident on Indian students in America

அமெரிக்க நாட்டில் படிக்கும் இந்தியர்கள் தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

அமெரிக்காவில் ஜார்ஜியா மாகாணத்தின் லித்தோனியா நகரில் எம்.பி.ஏ படித்து வந்த இந்தியரான விவேக் சைனி (25) என்பவர் கடந்த ஜனவரி மாதம் 16 ஆம் தேதி, மர்ம நபர் ஒருவரால் கொடூரமான முறையில் சுத்தியலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் குறித்து அமெரிக்க போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இதையடுத்து, இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான அகுல் பி. தவான் (18) அதே மாதத்தில் உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 28 ஆம் தேதி பர்டியூ பல்கலைக்கழகத்தில் படித்து வந்த இந்தியரான நீல் ஆச்சார்யா காணாமல் போனதாக தகவல் கிடைத்தது. அதன் பேரில், அவரைப் போலீசார் தேடி வந்தனர். ஆனால், சில நாட்களுக்குப் பிறகு அவர் மரணம் அடைந்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தைச் சேர்ந்த சையத் மஜாகீர் அலி என்ற ஐ.டி. மாணவர் ஒருவர் சிகாகோ நகரில் கடந்த 4 ஆம் தேதி மர்ம நபர்களால் துரத்தி துரத்தி தாக்கப்பட்டார். கொடூரமாகத் தாக்கப்பட்ட சையத் மஜாகீர் அலி, உதவிக்காக கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து, ஹைதராபாத்தில் உள்ள தாக்குதலுக்குள்ளான அலியின் குடும்பத்தினர், அவரை சந்திக்க அவசர விசா வழங்கும்படி கோரிக்கை விடுத்திருந்தனர். 

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அடுத்த நாளே இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பர்டியூ பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியலுக்கான முனைவர் படிப்பு படித்து வந்த சமீர் காமத் (23) என்ற இந்திய மாணவர், வாரன் கவுண்டி பகுதியில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி உயிரிழந்து கிடந்துள்ளார். அவரது உடலைக் கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் கிளெவ்லேண்ட் நகரில் படித்து வந்த இந்திய மாணவர் உமா சத்யசாய் கத்தே திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார். இந்த சம்பவத்தை நியூயார்க் நகரில் உள்ள இந்திய தூதரகம் உறுதி செய்துள்ளது. இது குறித்து இந்திய தூதரகம் கூறுகையில், உமா சத்யசாய் கத்தேவின் இறப்புக்கான காரணம் பற்றி விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவருடைய உடலை இந்தியாவுக்குக் கொண்டு வர அனைத்து உதவிகளை செய்து தர தயாராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்திய மாணவர் அல்லது இந்தியர் ஒருவர் மரணம் அடைவது இவரோடு சேர்த்து இது 10ஆவது சம்பவம் ஆகும். இந்த தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் அமெரிக்காவில் படிக்கும் இந்தியர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.