![CHENNAI HIGHCOURT](http://image.nakkheeran.in/cdn/farfuture/pQ5dboFXHlsUqvBMe1GLAx8rQFqv3c755k1yejp1f0w/1600885918/sites/default/files/inline-images/wdwe_47.jpg)
கடந்த 2017-ல், சட்டப் பேரவைக்குள் குட்கா பொருட்களைக் கொண்டுவந்த விவகாரத்தில், உரிமைக்குழு இரண்டாவது முறையாக அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்.எல்.ஏ.க்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகள், நீதிபதி புஷ்பா சத்யநாராயணா முன்னிலையில் விசாரணைக்கு வந்தன.
தி.மு.க தலைவர் ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்கள் இடமாற்றம், பதுக்கல், விற்பனை தொடர்பாகத்தான் தடை இருந்தது. வெளியில் கிடைப்பதை அரசு கவனத்திற்கு கொண்டு வரவே, பேரவைக்கு எடுத்து வந்து காண்பித்தனர். 2017-இல் அனுப்பிய நோட்டீஸில் அடிப்படை தவறு இருப்பதாக கூறி, அதை ரத்து செய்து, தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது. குட்கா வைத்திருந்தால் அது குற்றமா, இல்லையா என்பது நீதிமன்றத்தில் முடிவெடுக்க வேண்டிய விவகாரம் எனத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே விவகாரத்திற்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர் எனக் குறிப்பிட்டார்.
திமுக எம்.எல்.ஏ.க்கள் தரப்பில், ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, போதைப்பொருள் வணிகத்திற்குதான் தடை விதிக்கப்பட்டுள்ளதே தவிர, பேச்சு சுதந்திரத்திற்கு தடை விதிக்கவில்லை. அதனடிப்படையில்தான், குட்கா கிடைப்பது குறித்த பிரச்சனை பேரவையில் எழுப்பப்பட்டது. ஆனால், உள்நோக்குடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார்.
திமுக எம்.எல்.ஏ.-க்கள் தரப்பில் ஆஜரான அமீத் ஆனந்த் திவாரி, ஏற்கனவே ஒரு பக்க சார்புடன் நடவடிக்கை எடுத்த அதே குழுதான் மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பேரவை விதி 228-ஐ மீறும் வகையில், மீண்டும் குழு அமைக்கப்பட்டு, குட்கா விவகாரத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திமுக மீது முழுக்க அதிருப்தியில் உள்ள துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வமும் அக்குழுவில் இருக்கிறார் எனக் குறிப்பிட்டார்.
பேரவை செயலாளர் தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர், விஜய்நாராயண் ஸ்டாலினுக்கு எதிராக மட்டுமே உரிமைக்குழு தலைவரான பொள்ளாச்சி ஜெயராமன் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதனால், 18 பேருக்கும் எதிரான மனப்பான்மையுடன் உரிமைக்குழு இருப்பதாகக் கூறுவது தவறு. இவர்கள் குழுவின் முன் ஆஜராகவில்லை. வழக்கறிஞர்கள் ஆஜராகி, செப்டம்பர் 24 வரை அவகாசம் பெற்றுள்ளனர். பேரவை விதி 226-ன் அடிப்படையில் உரிமை மீறல் என பேரவைத் தலைவர் தானாக முன்வந்து, உரிமைக்குழுவுக்குப் பரிந்துரைக்கலாம். பேரவையில் நடந்தவற்றின் வீடியோ பதிவுகளை முழுமையாகப் பார்த்த பிறகுதான், ஸ்டாலின் உள்ளிட்ட 21 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. குட்கா பாக்கெட்டை காண்பித்ததை, பேரவை தலைவர் அனுமதிக்க முடியாது எனப் பலமுறை கூறியுள்ளார்.
அதனால், இது உரிமை மீறல்தான். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த விஜயகாந்த், கண்ணை உருட்டி, நாக்கை துறுத்தியதை, உரிமை மீறலாகக் கருதி, 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டது. உரிமைக்குழு, பேரவைத் தலைவருக்குப் பரிந்துரை மட்டுமே செய்யும். பேரவைத் தலைவர்தான் முடிவெடுப்பார். இன்றோ, நாளையோ, அடுத்த வாரமோ, பேரவை கூடப்போவதில்லை. எனவே தடை விதிக்க வேண்டாம். விரைவில் பதில் மனு தாக்கல் செய்கிறோம். விளக்கம் அளிக்க விருப்பப்பட்டால் திமுக எம்.எல்.ஏ.-க்கள் அவகாசம் கேட்கட்டும். எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தல் மட்டுமே வழங்குகிறோம் எனக் குறிப்பிட்டார்.
நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, ஆகஸ்ட் 25-ல் தீர்ப்பளித்தவுடன், செப்டம்பர் 7-ல் உரிமைக்குழு விரைந்து கூடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. குட்காவை காண்பிக்கக்கூடாது என அரசாணையில் இல்லை. மனுதாரர்கள் காண்பிக்கத்தான் எடுத்து வந்தார்கள் என்பதை தலைமை நீதிபதி உத்தரவு தெளிவுபடுத்தி உள்ளது. நாளை (செப்டம்பர் 24) காலை 10:30 -க்கு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்படும் எனக் குறிப்பிட்டார்.