Skip to main content

சென்னை உயர்நீதிமன்றத்தைத் திறந்து நேரடி விசாரணை நடத்த வேண்டும்!- தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தல்!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

chennai high court tamilnadu and puducherry bar council

 

சென்னை உயர்நீதிமன்றம் 6- ஆம் தேதி முதல் திறக்கப்பட்டு, நேரடி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

 

ஊரடங்கின் காரணமாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வீடியோ கான்ஃபரன்சிங் முறையிலேயே வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம், அனைத்து நீதிபதிகளும், வீடியோ கான்ஃபரன்சிங் முறையில் விசாரணை நடத்திய நிலையில், நீதிபதிகளுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டதன் காரணமாக, தற்போது குறிப்பிட்ட நீதிபதிகள் மட்டுமே அவசரகால வழக்குகளை விசாரித்து வருகின்றனர்.

 

chennai high court tamilnadu and puducherry bar council

 

இந்த நிலையில், தமிழ்நாடு பார் கவுன்சில், அனைத்து வழக்கறிஞர் சங்கங்களுடன் ஆலோசனை நடத்தியது. அதன் அடிப்படையில், வருகிற 6- ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றம், மதுரை உயர்நீதிமன்றக் கிளை மற்றும் சென்னையில் உள்ள மற்ற நீதிமன்றங்களைத் திறக்க வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் வலியுறுத்தியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையோடு,  நேரடி விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் வலியுறுத்தியுள்ளார்.

 

தொடர்ந்து வீடியோ கான்ஃபரன்சிங் முறையிலேயே வழக்குகளை விசாரிப்பதில், சில நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. எனவே, வரும் 6- ஆம் தேதி முதல், சென்னை உயர்நீதிமன்றத்தைத் திறந்து, நேரடி விசாரணை முறையை மேற்கொள்ள வேண்டும். வழக்கு விசாரணையின் போது மனுதாரர்களை அனுமதிக்கத் தேவையில்லை. சம்பந்தப்பட்ட வழக்குகளின் வழக்கறிஞர்கள் மட்டுமே ஆஜராக வேண்டும். அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் வழக்கறிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றனர். வழக்கறிஞர்களின் விருப்பத்திற்கேற்ப, காலை நேரத்தில் நேரடி விசாரணையும், மதியத்திற்குப் பிறகு வீடியோ கான்ஃபரன்சிங் முறையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டு நூறு நாட்கள் ஆகிவிட்டதாகவும், அமல்ராஜ் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்