Skip to main content

29 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

Published on 08/01/2024 | Edited on 08/01/2024
Chance of rain in 29 districtsChance of rain in 29 districts

வடகிழக்கு பருவமழை காரணமாகத் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21 ஆம் தேதி (21.10.2023) தொடங்கியதிலிருந்து தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், கரூர்,புதுக்கோட்டை, தஞ்சாவூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, தென்காசி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 29 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் தொடர் கனமழை காரணமாக மாணவர்களின் நலன் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (08.01.2023) ஒருநாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் தொடர் மழை காரணமாக புதுச்சேரியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர் கனமழை காரணமாக செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, அரியலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று (08.01,2023) ஒரு நாள் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான எச்சரிக்கை காரணமாக காரைக்கால் பகுதியில் செயல்பட்டு வரும் பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சென்னை, காஞ்சிபுரம், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மேலும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெற இருந்த தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்