தமிழகத்தில் அண்மையில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது. இதன் காரணமாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் வட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாகக் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. இத்தகைய சூழலில் கடந்த சில வாரங்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இத்தகைய சூழலில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் வெளியிடப்பட்டிருந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பில், “தமிழ்நாட்டில் சிவகங்கை, புதுக்கோட்டை, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், திருவண்ணாமலை, தேனி, திண்டுக்கல் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 18 மாவட்டங்களில் இன்று (07.07.2024) இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சென்னையின் புறநகர் பகுதிகளான அம்பத்தூர், புழல், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்டத்தின் ஆரணி, சேவூர், ஆதனூர், களம்பூர் மலையாம்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் மழை பொழிந்து வருகிறது. விழுப்பரம மாவட்டத்தில் உள்ள திருவெண்ணை நல்லூர், புதுப்பாளையம், எடையார், மெய்யூர் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அதனைச் சுற்றியுள்ள திருமயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தற்போது மழை பெய்து வருகிறது. இதே போன்று தமிழகதில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.