Skip to main content

“ஆக்கப்பூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மத்திய அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

Published on 30/09/2024 | Edited on 30/09/2024
tamilnadu cm mk stalin letter to central minister jaishankar

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. இந்த சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இது போன்ற சூழலில், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவித்திடவும் வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடி மற்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தொடர்ந்து கடிதம் எழுதி வருகிறார். 

இதற்கிடையே, வழக்கம்போல் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 15 மீனவர்கள் உரிய அனுமதிச் சீட்டு பெற்று விசைப்படகுகளில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்ற போது, இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி, 15 மீனவர்களை கைது செய்துள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் சிறைப்படித்த மீனவர்களையும், அவர்களது படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதிய அக்கடிதத்தில், ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் சுடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சிக்கலான பிரச்சினையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியிருந்தேன்.

இந்த நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 27.09.2024 அன்று பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியிருந்தேன். எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்’ என்று தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்