![Buildings built by the Minister! Local representatives adjusting at their own expense!](http://image.nakkheeran.in/cdn/farfuture/pGA8jaVBNEOlvaS3ufh3Aj46gqaC0ZRYLs_b3On0SFg/1652530165/sites/default/files/inline-images/th-1_3201.jpg)
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 6வது முறையாக வெற்றி பெற்ற சக்கரபாணி, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சராக உள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் திண்டுக்கல் மாவட்டத்திற்கு வந்த முதல்வர் ஸ்டாலின் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு ரூ.930 கோடியில் கூட்டு குடிநீர் திட்டத்தை அறிவித்திருக்கிறார். இதற்காக தொகுதி மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்து வருகிறார்கள். அதுபோல் கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் அதற்கு முன்பு நடந்த ஊராட்சி மன்ற தேர்தலிலும் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பதவிகளை ஒதுக்கினார்.
![Buildings built by the Minister! Local representatives adjusting at their own expense!](http://image.nakkheeran.in/cdn/farfuture/yypwISNindQIfa9Ld4OWaT5zrutVWrdiWbw4sRlZCss/1652530190/sites/default/files/inline-images/th-2_947.jpg)
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் குக்கிராமங்கள் முதல் நகரம் வரை தொகுதி மக்களின் பயன்பாட்டுக்காக நூற்றுக் கணக்கான பயணியர் நிழற்குடைகள், கலையரங்களை அமைச்சர் சக்கரபாணி முன்னதாக கட்டிக் கொடுத்திருந்தார். ஆனால், கடந்த கடந்த பத்து ஆண்டுகளாக எதிர்க்கட்சியாக இருந்ததால் அமைச்சர் சக்கரபாணி கட்டிக் கொடுத்த கலை அரங்குகளும், பயணியர் நிழல் குடையும் பராமரிப்பு இன்றி பழுதடைந்த நிலையில் இருந்துவந்தது. அதை கண்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்கள் பகுதிகளில் உள்ள கலையரங்கம் மற்றும் பயணியர் நிழற்குடைகளை தங்கள் சொந்தப் பணத்தில் செலவு செய்து புதுப்பித்ததுடன், அமைச்சர் நிதியில் கட்டப்பட்டது என்பதை நினைவு கூறும் வகையில் பெயர் பலகையும் புதிதாக வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்துவருகிறார்கள்.