அரசு அலுவலர்கள் வீட்டில் லஞ்ச மழை பொழிவது ஒன்றும் வியப்பல்ல. இதுபோன்ற அவப்பெயருக்கு ஆளாகாமல், நேர்மையாகப் பணிபுரியும் அரசு ஊழியர்களும் இல்லாமல் இல்லை. அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் தென்னரசு வீட்டிலும் கூட, லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி லட்சங்களில் பணத்தைப் பறிமுதல் செய்திருப்பது, அரசு அலுவலர்கள் வட்டாரத்தில் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.
யார் அந்த தாசில்தார்? என்ன நடந்தது?
ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்கலத்தில் வட்டாட்சியராகப் பணியாற்றும் தென்னரசு, பட்டா மாறுதலுக்காக கருப்பையா என்பவரிடமிருந்து ரூ.1 லட்சம் வாங்கியபோது லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் பிடிபட்ட நிலையில், அருப்புக்கோட்டை அருகிலுள்ள ஆத்திப்பட்டியில் உள்ள அவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு ரூ.45 லட்சத்து 73 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் சொத்தை விற்றுக் கிடைத்த பணம்தான் அது என்று உறவினர்கள் தரப்பில் கூற, அந்தப் பணத்திற்கான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துவிட்டு பணத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.