
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே காதலித்த பெண்ணை திருமணம் செய்ய அழைத்த காதலன் மதுபோதையில் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது குஞ்சாண்டியூர். இந்த பகுதியைச் சேர்ந்த விஜய் என்ற இளைஞர் அருகேயுள்ள பாலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவரை இரண்டு வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒருவரை ஒருவர் காதலிப்பதாக கூறப்படும் நிலையில் காதலியின் வீட்டிற்கு நேரில் சென்ற இளைஞர் விஜய் 'திருமணம் செய்து கொள்ளலாம் வா' என அழைத்துள்ளார்.
மதுபோதையில் இருந்த விஜய்க்கு பெண் குடும்பத்தார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு சூழ்ந்தது. பெண்ணின் உறவினர்கள் அங்கு கூடினர். ஆத்திரமடைந்த இளைஞர் விஜய் பெண்ணின் குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, மதுபோதையில் அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். ஒருமுறை இருமுறை அல்ல தொடர்ந்து நான்கு முறை கிணற்றுக்குள் குதித்துள்ளார்.
ஒவ்வொரு முறையும் தற்கொலை மிரட்டல் விடுத்து கிணற்றுள் குதித்து மேலே வந்த விஜய், ஐந்தாவது முறையாக கிணற்றில் குதித்த பொழுது கிணற்றுக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். உடனடியாக பெண் வீட்டார் போலீஸாருக்கும் தீயணைப்புத் துறையினருக்கும் இதுகுறித்து தகவல் அளித்தனர். உடனடியாக அங்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மதுபோதையில் கிணற்றில் சிக்கிக்கொண்ட இளைஞர் விஜய்யை மீட்டு வெளியே கொண்டு வந்து எச்சரித்து அனுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.