Skip to main content

“கடும் விளைவுகளை பா.ஜ.க. அரசு சந்திக்க நேரிடும்...” - செல்வப்பெருந்தகை எச்சரிக்கை!

Published on 10/03/2024 | Edited on 10/03/2024
BJP govt will face severe consequences says Selvaperunthagai

தமிழக மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் 22 பேரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் இன்று (10.03.2024) கைது செய்தனர். மேலும் மீனவர்களின் 3 படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 22  மீனவர்களுக்கும் மார்ச் 22 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து இலங்கை ஊர்க்காவல்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நீதிமன்ற உத்தரவையடுத்து 22 மீனவர்களும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாக நடந்து வருகிறது. சமீபத்தில் மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து ராமேஸ்வரம், பாம்பன் பாலம் அருகே தமிழக மீனவர் காங்கிரஸ் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பிரதமர் மோடி தமிழக வருகையின் போது காங்கிரஸ் கட்சியினர் பல இடங்களில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி எதிர்ப்பை தெரிவித்தார்கள். அதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட 18 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். கடந்த இரண்டு மாதங்களில் 69 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதிலும், படகுகளை மீட்பதிலும் கடுமையான சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை இருக்கிறது.

இந்நிலையில் கடலில் 32 நாட்டிகல் தொலைவில் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக மூன்று விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். கைதான மீனவர்கள் அனைவரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினருடைய தாக்குதலுக்கு ஆளாவதை தடுத்து நிறுத்துவதற்கு மத்திய பா.ஜ.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதற்கு நிரந்தர தீர்வு காண இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இலங்கை அரசோடு பேசி உரிய தீர்வு காண வேண்டுமென பலமுறை கோரிக்கை விடுத்தும் அந்த கோரிக்கைகள் அலட்சியப்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 2013 ஆம் ஆண்டு பா.ஜ.க.வினர் ராமேஸ்வரத்தில் நடத்திய கடல் தாமரை மாநாட்டில் பங்கேற்ற சுஷ்மா ஸ்வராஜ் 2014 தேர்தலுக்கு பிறகு பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மீனவர்கள் நலன்களை பாதுகாக்க மத்திய அரசில் தனி அமைச்சகம், மீனவர் கைது, படகுகள் பறிமுதல் முற்றிலும் தடுத்து நிறுத்தப்படும் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நிறைவேற்றுவதற்கு எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை. அதற்கு மாறாக, ஆயிரக்கணக்கான மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.

BJP govt will face severe consequences says Selvaperunthagai

கடந்த 2016 ஆம் ஆண்டு இரு நாட்டு மீனவர்களிடையே ஏற்படுகிற பிரச்சினைக்கு தீர்வு காண கூட்டு நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டது. 2020 ஆம் ஆண்டு வரை அந்த கூட்டு நடவடிக்கைக்குழு ஐந்து முறை கூடியது. ஆனால், 2020 ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த நான்கு ஆண்டுகளாக அந்த கூட்டுக் குழு கூட்டப்படவில்லை. இத்தகைய அலட்சியப் போக்கின் காரணமாக மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எந்தவித அணுகுமுறையையும் மத்திய பா.ஜ.க. அரசு பின்பற்றவில்லை. தமிழக மீனவர்கள் ஏன் கைது செய்யப்படுகிறார்கள்?. படகுகள் ஏன் பறிமுதல் செய்யப்படுகிறது?. இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த எந்தவிதமான முயற்சிகளையும் மத்திய பா.ஜ.க. அரசு செய்ய முன்வரவில்லை. இந்த பிரச்சினைக்கான உரிய தீர்வுகள் காணப்படாத நிலையில் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையான கேள்விக்குறியாக்கப்பட்டு வருகிறது. எனவே, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல்களும், கைது நடவடிக்கைகளும் உடனடியாக தடுத்து நிறுத்தப் படவில்லையெனில் கடும் விளைவுகளை மத்திய பா.ஜ.க. அரசு சந்திக்க நேரிடும் என எச்சரிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்