
மன்னார்குடி அருகே லாரி மோதியதில் அண்ணன், தங்கை இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது.
திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி கிராமத்தை சேர்ந்த ஆனந்த் 27, அபி 25 ஆகிய இருவரும் மன்னார்குடியை அடுத்துள்ள வடபாதி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டு விஷேசத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். வடபாதி அருகில் சென்றுகொண்டிருந்தபோது, சாலையில் எதிரே அதிவேகத்தில் தாறுமாறாக வந்த டிப்பர் லாரி, கட்டுப்பாடின்றி இருவர்மீதும் மோதியதில் ஆனந்த், அபி இருவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். லாரியை ஓட்டிவந்த டிரைவர் லாரியை விட்டுவிட்டு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலையாமங்கலம் காவல்துறையினர் இறந்தவவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விபத்து ஏற்படுத்திய டிரைவரை தலையாமங்கலம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தேடிவருகின்றனர். ஒரே குடும்பத்தில் உள்ள இரண்டு பிள்ளைகளும் விபத்திற்குள்ளாகி இறந்தது அப்பகுதியில் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.