Skip to main content

பார் கொள்ளை; போலீசார் சஸ்பெண்ட்!

Published on 21/10/2023 | Edited on 21/10/2023

 

bar robbery; Police suspended!

 

தென்காசி மாவட்டத்தின் சேர்ந்தமரம் காவல் சரகத்திற்குட்பட்ட ஐந்து கிராமங்களில் அரசு டாஸ்மாக் மற்றும் தனியாரின் லைசென்ஸ் பெற்ற பார்களும் செயல்படுகின்றன. ஓரளவுக்கு வளர்ச்சி என்பதால் சரகத்தில் வருகிற கிராமங்களின் டாஸ்மாக், பார் விற்பனைகள் அமர்க்களப்படுவதுண்டு. கொழிக்கும் வருமானம் என்பதால் காவல் லிமிட்டிற்குப் போகவேண்டிய மாதப் பதிவுகள் ரெகுலராக போய்விடுவதுண்டாம்.

 

அக். 2ம்  காந்தி ஜெயந்தி அன்று டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்படக்கூடாது. கண்டிப்பாக அடைக்கப்பட வேண்டும் என்ற விதியும், அரசின் கட்டளையும் உண்டு. போக வேண்டிய இடத்திற்குத்தான் மார்ஜின் போய்விடுவதால் அந்த கெத்தில் சேர்ந்தமரம் காவல் எல்லையில் பார்களும் அன்றைய தினம் செயல்பட்டிருக்கின்றன. நான்கு பார்களின் அன்றைய ஸ்பெஷல் கவனிப்பு போய்விட்ட நிலையில் சரகத்திற்குட்பட்ட கள்ளம்புளி கிராமத்தின் பார் மட்டும் ஸ்பெஷல் கிஸ்தியைச் செலுத்தாமல் பார் விறுவிறுப்பாக ஓடியிருக்கிறது. இதனை நோட்டமிட்ட சேர்ந்தமரம் காவல் நிலைய காவலர்கள் உள்ளிட்ட ஸ்பெஷல் போலீஸ் டீம் மஃப்டியில் அந்தப் பாருக்குச் சென்றவர்கள், ''அக்-02 காந்தி ஜெயந்தி ஞாபகம் இல்லையா. அடைக்கலையா'' என பார் நடத்துகிற புள்ளியிடம் அதட்டி இருக்கிறார்கள்.

 

''மாசா மாசம் தான் பார் பதிவு போய்டுதில்லோ. பின்ன என்ன இப்போ. இன்னைக்கு என்ன ஸ்பெஷல் கவனிப்பா'' என பார் புள்ளிகள் கெத்தாகக் கேட்டிருக்கிறார்கள். இதனால் சுரீரென்று விசனப்பட்ட காவலர்கள் அவர்களை விரட்டி ஒதுக்கிவிட்டு அங்குள்ள கல்லாவில் இருந்த கனமான தொகையை அள்ளியவர்கள் கூடவே ஐந்து கேஸ் பெட்டி சரக்கையும் தூக்கிக் கொண்டு போயிருக்கிறார்கள்.

 

bar robbery; Police suspended!

 

வந்தது காவலர்கள் எனப் பதறிய பார் லைசென்ஸ் ஓனர் இளையபாண்டியோ அள்ளிச் சென்றதைக் காவல் நிலையத்தில் ஒப்படைப்பார்கள் என்று காத்திருந்திருக்கிறார். ஆனால் நான்கு நாட்கள் கடந்தும் எந்த வித அசைவும் தென்படாமல் போகவே, போலீசார் பாரில் நடந்து கொண்டது, சரக்கு பெட்டிகளைத் தூக்கிச் சென்றது உள்ளிட்டவைகள் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளை ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி. மற்றும் டி.ஐ.ஜி உள்ளிட்ட அதிகாரிகளிடம் புகார் கொடுத்துவிட, அதன்பிறகே அரண்டு மிரண்டு போன சேர்ந்தமரம் காவல் நிலைய போலீசார், பார் ஓனர் இளையபாண்டி மற்றும் மூன்று காவலர்கள் மீது எப்.ஐ.ஆர் போட்டதுடன், எடுத்துச் சென்றது 5 கேஸ் பெட்டிகளுக்குப் பதிலாக மூன்று கேஸ் பெட்டி என்று மட்டுமே எப்.ஐ.ஆரில் காட்டிவிட்டார்களாம்.

 

டீமாக வந்த போலீசார் மஃப்டியிலிருந்தார்கள். பார் பணியாளர்களை அடித்து வெளியே உட்கார வைத்து விட்டு பணத்தையும் எடுத்தவர்கள் இந்த வேலையைச் செய்துள்ளார்கள். அவர்கள் நடந்து கொண்டதை சி.சி.டி.வி. ஆதாரத்துடன் மாவட்ட எஸ்.பி.யிடம் புகார் கொடுத்துள்ளேன் என்கிறார் பார் உரிமையாளரான இளையபாண்டி.

 

பார் பணியாளர் ஒருவரிடம் இருந்த வண்டிக்கு பைனான்ஸ் கட்ட வைத்திருந்த பணத்தையும் விடுங்கி விட்டார்கள். எப்.ஐ.ஆர் ஆனதைத் தொடர்ந்து பார் ரெய்டுக்கு சென்று விவகாரத்தை உண்டு பண்ணியதாக மூன்று காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கள்ள மது விற்பதை காட்டிக் கொடுத்தவருக்கு மிரட்டலா?-100க்கு அழைத்து புலம்பிய புகார்தாரர்

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Complainant who called 100 to threaten the person who betrayed him for selling fake liquor?

கடலூரில் கள்ளத்தனமாக மதுவிற்ற சம்பவம் தொடர்பாக புகார் அளித்தவருக்கு கொலை மிரட்டல் விடப்பட்டதாக நபர் ஒருவர் பேசும் ஆடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ளது ராமாபுரம் பகுதி. இந்த பகுதியில் கள்ளத்தனமாக மது விற்பனை நடைபெற்று வருவதாக ஜேசுதாஸ் என்பவர் காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் புகார் கொடுத்தவரின் செல்போன் நம்பரை காவல்துறையினரே கள்ளமது விற்ற நபருக்கு தந்து விட்டதாக அந்த நபர் மீண்டும் அவசர அழைப்பு எண்ணான 100 க்கு தொடர்பு கொண்டு புலம்பியுள்ளார்.

இது தொடர்பான ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் பேசும் புகாரளித்த ஜேசுதாஸ் என்பவர் ''சார் கள்ளச்சாராயம் விற்கிறார்கள் என்று சொல்லிவிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு கனெக்சன் கொடுங்க என கம்ப்ளைன்ட் கொடுத்தேன். ஆனால் அவர்கள் என்னான்னா என்னுடைய நம்பரை எடுத்து இவன்தான் புகார் கொடுக்கிறான் என கள்ளச்சாராயம் விற்றவர்களிடம் என் நம்பரை போட்டு கொடுத்துள்ளார்கள். அவர்கள் போலீசுக்கு நீதாண்டா போன் பண்ணுனே எனக்கூறி, உன்ன வெட்டாம விடமாட்டேன் என மிரட்டுகிறார்கள். நான் தோப்பில் வந்து ஒளிந்து கொண்டிருக்கிறேன். தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை'' என பேசும் அந்த ஆடியோ வைரலாகி வருகிறது.

Next Story

பிரஜ்வல் ரேவண்ணா மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case filed against Prajwal Revanna

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்தத் தேர்தலில், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் ஜனதா தளம் (எஸ்) கட்சி போட்டியிடுகிறது. கர்நாடகாவில் ஆளும் கட்சியான காங்கிரஸ் இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுகிறது. இந்நிலையில் தேவகவுடாவின் பேரனும், ஹாசன் மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்துள்ளது. தன்னிடம் உதவி கேட்டு வந்த ஏராளமான பெண்களை பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் தேவைகளுக்காக பயன்படுத்திக் கொண்டதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருப்பது போன்ற ஆபாச காட்சிகள் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரஜ்வல் ரேவண்ணா மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் மாநில மகளிர் ஆணையம் கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதி இருந்தது.

இதனையடுத்து இந்தப் புகார் குறித்து சிறப்பு புலானாய்வுக் குழு அமைத்து விசாரணை தொடங்க முடிவெடுக்கப்பட்டது. இதற்கான உத்தரவை கர்நாடக முதல்வர் சித்தராமையா வெளியிட்டிருந்தார். அதே சமயம் இந்தப் புகார் குறித்த நெருக்கடி அதிகரிப்பால் பிரஜ்வல் ரேவண்ணா கர்நாடகாவில் இருந்து ஜெர்மனிக்கு தப்பியோடியதாவும் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கிடையே காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியினர் கைது செய்ய வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த மக்களவைத் தேர்தலில் ஹாசன் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளராக பிரஸ்வால் ரேவண்ணா ப்ரஜ்வால் மீண்டும் போட்டியிடும் ஹசான் தொகுதியில் கடந்த 26ம் தேதி தேர்தல் நடைபெற்று முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா மீது ஹோலேநரசிப்பூர் காவல் நிலையத்தில் ஐபிசி 354 ஏ, 354 டி, 506, மற்றும் 509 ஆகியவற்றின் கீழ் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்கும் சிஐடி பிரிவின் எஸ்ஐடி (சிறப்பு புலனாய்வுக் குழு) குழு ஐபிஎஸ் அதிகாரி விஜய் குமார் சிங் தலைமையில் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் சிஐடி டிஜி சுமன் டி பென்னேகர் மற்றும் ஐபிஎஸ் அதிகாரி சீமா லட்கர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.