Skip to main content

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 400 வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சிலர் நிவாரண நிதி!

Published on 22/05/2020 | Edited on 22/05/2020

 

bar council lawyers fund cuddalore district


இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நாடு முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கை மே 31- ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. 
 


இந்நிலையில் வறுமையில் வாடும் வழக்கறிஞர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திட தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாக நிவாரண நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள் பலர் இதற்காக நிதி உதவிகளை வழங்கி வருகின்றனர். அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள 400 வழக்கறிஞர்களுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

கடலூர் நீதிமன்றத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை நீதிபதி கோவிந்தராஜன், திலகவதி, முதலாவது கூடுதல் மாவட்ட நீதிபதி செந்தில்குமார், தமிழ்நாடு- புதுச்சேரி பார் கவுன்சில் இணைத் தலைவர் வழக்கறிஞர் கே.பாலு ஆகியோர் வழக்கறிஞர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினர்.  
 

 


இதேபோல் விருத்தாச்சலம் நீதிமன்ற வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி  இளவரசன் தலைமையில் நிதியுதவி  வழங்கப்பட்டது. அப்போது வழக்கறிஞர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும், முகக்கவசங்கள் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. இதில் அனைத்து நீதிமன்றங்களிலும் பணியாற்றும் வழக்கறிஞர்களும் நிதியுதவியைப் பெற்றுக்கொண்டனர். 
 

மேலும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ஆதரவற்றவர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியும் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. அப்போது ஆதரவற்ற 150 பேருக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
 

http://onelink.to/nknapp


இந்நிகழ்ச்சிகளில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


 

 

சார்ந்த செய்திகள்