![Anti-corruption check at Vellore Avin office](http://image.nakkheeran.in/cdn/farfuture/1ac7IpUL2I8eYsrp5vP7aDy0lNqm65OUEuv-ogkTb5E/1632471264/sites/default/files/inline-images/AVIN.jpg)
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் ஆவின் அலுவலகத்தில், கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. கடந்த 16ஆம் தேதி வேலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள், 34 லட்சம் ரூபாய் பணம், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
முன்னாள் அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம், நகை ஆகியவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தின் ஜெ.எம். ஒன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் இந்த வேலூர் ஆவின் நிறுவனத்தின் தலைவர் வேலழகன், கே.சி. வீரமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது. அதனடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.