தேனி நகரில் உள்ள நாடார் சரஸ்வதி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் கலந்துகொண்டு போடி, கம்பம், பெரியகுளம், ஆண்டிபட்டி ஆகிய சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 10,000- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு ரூபாய் 4 கோடியே 2 லட்சத்து 57 ஆயிரத்து 282 மதிப்பிலான விலையில்லா மிதிவண்டியை வழங்கினார்.
விழாவில் பேசிய துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், "இந்தியாவிலேயே தமிழகம்தான் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அரசு பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப், விலையில்லா பாடப்புத்தகம், விலையில்லா மிதிவண்டி என அனைத்தும் வழங்கி ஏழை, எளிய மாணவர்கள் சிறப்பாக கல்வி பயில்வதற்கு அரசு சிறப்பாக செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்கள் கவனமுடன் படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்" என்றார்.
இந்த விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் பல்லவி பல்தேவ் தலைமை தாங்கினார். விழாவில பெரியகுளம் கோட்டாட்சியர் சினேகா, மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா, மாவட்ட கல்வி அலுவலர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.