Skip to main content

டாஸ்மாக்கை திற... மதுப்பிரியர்களின் மனைவிகள் போராட்டத்தால் திணறிய போலீசார்

Published on 11/09/2018 | Edited on 11/09/2018
Wine



விழுப்புரம் மாவட்டம் சாலாமேடு பகுதியில் டாஸ்மாக் கடை இயங்கி வந்தது. மது அருந்திவிட்டு சாலையிலேயே சுற்றித் திரிவது, அரைகுறை ஆடைகளுடன் சாலையில் படுத்து கிடப்பது போன்றவற்றால் பொதுமக்களுக்கு குறிப்பாக பெண்கள், மாணவிகளுக்கு தொந்தரவு உள்ளதாக கூறி அந்தப் பகுதியைச் சேர்ந்த பெண்கள் பலமுறை போராட்டம் நடத்தினர். மேலும் அரசு உயர் அதிகாரிகளுக்கு மனு அளித்தனர். இந்தப் பெண்களின் கடும் போராட்டத்திற்கு பிறகு அந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது.
 

இதையடுத்து மதுப்பிரியர்கள் ஐந்து கிலோ மீட்டர் தூரம் சென்று டாஸ்மாக் கடையில் மது அருந்தி வந்தனர். மது அருந்தியவர்கள் சிலர் போதையில் டாஸ்மாக் பாரிலேயே படுத்துவிடுகின்றனர். வீட்டுக்கு செல்வதில்லை. 
 

இந்நிலையில், தங்கள் கணவன்மார்கள் மது வாங்குவதற்காக வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது. அவர்களால் அந்த பழக்கத்தை விடவும் முடியவில்லை. இதனால் கடையை திறக்க வேண்டும் என்று மதுப்பிரியர்களின் மனைவிகள் பூட்டியிருந்த டாஸ்மாக் கடை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனை அறிந்து அங்கு வந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தினர்.
 

இதனிடையே டாஸ்மாக் கடை மூடுவதற்கு காரணமாக இருந்த பெண்கள் அங்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது மதுப்பிரியர்களின் மனைவிகள், உள்ளூரில் கடை இருந்தபோது குவாட்டர் குடித்தவர்கள், வெளியூருக்கு கடை சென்றவுடன் அதையும் தாண்டி குடிக்கிறார்கள். கேட்டால் ஐந்து கிலோ மீட்டர் செல்வதை காரணமாக சொல்கிறார்கள் என போலீசாரிடம் தெரிவித்தனர்.
 

மீண்டும் டாஸ்மாக் கடை திறந்தால் தீக்குளித்து தற்கொலை செய்துகொள்வோம் என கடையை மூட காரணமாக இருந்த பெண்கள் எச்சரிக்கை விடுத்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர் போலீசார். 
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.

Next Story

போராட்டத்தில் ஈடுபட்ட எம்.பிக்கள் குண்டுக்கட்டாக கைது!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
MPs who participated in the protest were arrested with explosives!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

இந்த நிலையில், டெல்லியில் தலைமைத் தேர்தல் ஆணையத்தின் முன் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் தலைமையில் எம்.பி.க்கள் இன்று (08-04-24) 24 மணி நேர தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதில், ஒன்றிய பா.ஜ.க அரசுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு போராட்டம் நடத்தினர். இது குறித்து எம்.பி.க்கள் பேசுகையில், ‘சி.பி.ஐ, அமலாக்கத்துறை, ஐ.டி, என்.ஐ.ஏ போன்ற விசாரணை அமைப்புகளை ஒன்றிய அரசு தவறாக பயன்படுத்துவதை தடுக்கவும்’ போராட்டத்தில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை வைத்தனர். 

மேலும், ஒன்றிய அரசின் விசாரணை அமைப்புகள் அனைத்தும் பா.ஜ.கவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், விசாரணை அமைப்புகளால் தேர்தலின் மாண்பே சீர்குலைக்கப்படுவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி.க்கள் குற்றச்சாட்டு வைத்தனர். இதனையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் 2 தேர்தல் ஆணையர்களை சந்தித்து முறையிட்டு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் உள்ளிட்ட எம்.பிக்களை போலீசார் குண்டுக்கட்டாக கைது செய்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது