Skip to main content

சுங்க கட்டண உயர்வால் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும் - ஈஸ்வரன்

Published on 27/03/2018 | Edited on 27/03/2018
toll gate

 

சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள 20 சுங்கச்சாவடிகளின் கட்டணம் உயர்த்தப்பட்டு அமலுக்கு வர இருக்கிறது. கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும்  பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் வரி என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டுவதை போல, 20 வருடங்களுக்கு மேலான சுங்கச்சாவடிகளை பயன்பாட்டிலிருந்து எடுக்காமல் அல்லது கட்டணத்தையாவது குறைத்து வசூலிக்காமல் தொடர்ந்து ஆண்டுக்கு ஆண்டு சுங்கக்கட்டணத்தை உயர்த்தி மத்திய அரசு வருமான நோக்கத்தோடு செயல்படுவது கடும் கண்டனத்திற்குரியது. 

 

சுங்கக்கட்டணத்தை உயர்த்தினால் லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட சரக்கு வாகனங்களின் வாடகை உயர்ந்து மக்கள் அன்றாடம் பயன்படுத்தப்படும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும். சிறு, குறு தொழில்கள் அனைத்தும் முடங்கி, வேலைக்கு திண்டாடி கொண்டிருக்கும் சூழலில் இதுபோன்ற கட்டண உயர்வு சாமானியர்களை பெரிதும் பாதிக்கும் என்பதை மத்திய அரசு உணராதது வேதனையளிக்கிறது.

 

 இந்த கட்டண உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகும். ஏழை எளிய மக்களுடைய வருமானத்தையும், குடும்ப பொருளாதாரத்தையும் உயர்வதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காமல், மத்திய மாநில அரசுகள் எதற்கெடுத்தாலும் வரி உயர்வு, கட்டண உயர்வு என்ற போர்வையில் அடித்தட்டு மக்களின் பணத்தை சுரண்டுவது மக்களுக்கான அரசுகளாக இருக்க முடியாது. எனவே ஏற்பட இருக்கும் பாதிப்பை உணர்ந்து அமலுக்கு வர இருக்கின்ற சுங்கக்கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ’’
 

சார்ந்த செய்திகள்

Next Story

கமல்ஹாசன் குமாரசாமியை சந்தித்தது காவிரிக்காகவா ? விஸ்வரூபம் -2 படத்திற்காகவா ? - ஈஸ்வரன்

Published on 04/06/2018 | Edited on 04/06/2018

 

k k

 

கமல்ஹாசன் கர்நாடக முதல்வர் குமாரசாமியை சந்தித்தது காவிரிக்காகவா ? விஸ்வரூபம் -2 படத்திற்காகவா ? என்று சந்தேகத்தை எழுப்புகிறார் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்.

 

இது குறித்த அவரது அறிக்கை:  ’’காவிரி விவகாரத்தில் தமிழகத்தின் பல ஆண்டுகால சட்ட போராட்டத்திற்கு பிறகு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு மத்திய அரசு மேலாண்மை ஆணையம் அமைத்த நிலையில், இன்றைய தினம் கர்நாடக முதலமைச்சர் குமாரசாமியை கமல்ஹாசன் சந்தித்து காவிரி பிரச்சினையை பற்றி பேசினோம் என்று தெரிவித்திருப்பது உள்நோக்கம் கொண்டது. இச்சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடத்தில் காவிரி பிரச்சினையை இரு மாநிலங்களும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கலாம் என்று கமல்ஹாசன் கருத்து கூறியிருப்பது குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

 

 கமல்ஹாசனின் இந்த கருத்து மத்திய அரசு அமைத்திருக்கும் ஆணையத்திற்கு எந்த அதிகாரமும் இல்லாதததை போலவும், மீண்டும் கர்நாடக மாநிலத்திற்கே எல்லா அதிகாரமும் இருப்பதை போலவும் தோற்றத்தை உருவாக்கியிருக்கிறது. கமல்ஹாசன் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்க உத்தரவிட்ட பிறகு அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டியதும், மத்திய அரசு ஆணையம் அமைத்த பிறகு கர்நாடக முதலமைச்சரை சந்தித்ததும் தேவையற்றது.

 

 காவிரிக்கான சந்திப்பு என்று சொல்லிவிட்டு விரைவில் வெளிவரவிருக்கும் விஸ்வரூபம் 2 படம் கர்நாடகாவில் திரையிடுவதில் எந்தவொரு பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்பதற்காக கர்நாடக முதலமைச்சரை கமல்ஹாசன் சந்தித்து பேசியிருப்பாரோ என்ற சந்தேகம் தான் எழுகிறது. காவிரி பிரச்சினையில் தமிழகத்திற்கு ஆதரவாக கருத்து கூறியதாக சொல்லி ரஜினிகாந்த் நடித்து வெளிவரவிருக்கும் காலா படத்தை கர்நாடகாவில் திரையிட தடை விதித்ததை போல, விஸ்வரூபம் 2 படத்திற்கும் தடை போட்டுவிடுவார்களோ என்ற அச்சத்தில் முன்னேற்பாடாக இச்சந்திப்பை கமல்ஹாசன் நிகழ்த்தியிருக்கிறார்.

 

 காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் வீர வசனங்களை எல்லாம் பேசிய நடிகர் சத்யராஜ், தான் நடித்த பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிட சிக்கல் ஏற்பட்ட போது மன்னிப்பு கேட்டதையும் பார்த்திருக்கிறோம். அதேபோல கமல்ஹாசன் நடித்து வெளிவந்த விஸ்வரூபம் படத்திற்கு அப்போது பல பிரச்சினைகள் எழுந்து திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. தற்போது காலா படத்திற்கு உருவாகியிருக்கும் சிக்கல் விஸ்வரூபம் 2 படத்திற்கும் வராமல் இருப்பதற்காக காவிரி பிரச்சினையில் நான் தமிழகத்திற்கு ஆதரவானவன் இல்லை என்பதை கர்நாடகாவிற்கு உணர்த்தவே கமல்ஹாசன் சென்றது அவரது பேட்டியின் மூலம் தெளிவாகிறது. எனவே கமல்ஹாசன் தன்னுடைய நலனுக்காக சந்திப்பை நிகழ்த்திவிட்டு காவிரிக்காக சென்றேன் என்று கூறுவதை எல்லாம் தமிழக மக்கள் நம்பமாட்டார்கள். ’’

Next Story

எல்லா அதிகாரமிருந்தும் அரசியல் சுயலாபத்திற்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது - ஈஸ்வரன் 

Published on 29/03/2018 | Edited on 29/03/2018
es

 

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உயர்நீதிமன்ற கொடுத்த காலக்கெடு இன்றுடன் முடிந்தது.  மத்திய அரசு கைவிரித்துவிட்டது.  இதற்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈஸ்வரன் வெளி்யிட்டுள்ள கண்டனம்:


’’தமிழகத்தை ஏமாற்றியது கண்டனத்திற்குரியது. தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.


காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரத்திற்குள் அமைக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு இன்றைய தினத்துடன் கெடு முடிந்த நிலையில், மத்திய அரசுக்கு எல்லா  அதிகாரமிருந்தும் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகதமிழகத்தை வஞ்சித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது. 

 

காவிரி பிரச்சினையில் மத்திய அரசு கர்நாடகாவிற்கு  ஆதரவாகவும், தமிழகத்திற்கு எதிராகவும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளை மேற்கொள்வது தமிழகத்திற்கும், தமிழக  மக்களுக்கும் துரோகம் இழைக்கும் செயல். உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நாட்களுக்குள் காவிரி மேலாண்மை  வாரியத்தை அமைக்காமல் நீதி துறையின் மீதுள்ள  நம்பிக்கையை மத்திய அரசே கேள்விக் குள்ளாக்கியிருப்பது  ஜனநாயகத்திற்கு எதிரானது. அதிகாரத்தில் உள்ளவர்கள் தீர்ப்பை எப்படி வேண்டுமானாலும் உதாசனப்படுத்தலாம் என்பதற்கு இது சான்றாக அமைந்திருக்கிறது. கடந்த 6 வாரங்களாக காவிரி விவகாரத்தில் மத்திய அரசு செயல்படுவதை போல ஒரு மாய தோற்றத்தை உருவாக்கினார்களே தவிர, மேலாண்மை வாரியம் அமைக்க தீவிர முயற்சி எதுவும் எடுக்கவில்லை. காவிரி விவகாரம் நீண்டகாலமாக தீர்க்க முடியாத காரணத்தினாலும், பல்வேறு சட்டப்போராட்டங்களுக்கு பிறகுதான் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது என்பதை மத்தியில் ஆள்பவர்கள் நினைவில் கொள்ளாதது வேதனையளிக்கிறது. 

 

தமிழக அரசு உச்சநீதிமன்ற உத்தரவை மத்திய அரசு செயல்படுத்த தகுந்த அரசியல் அழுத்தத்தை ஆரம்பத்திலிருந்தே கொடுத்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை கர்நாடக சட்டமன்ற தேர்தல் வெற்றிக்காக மத்திய அரசு அவமதித்ததை தமிழக மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள். 

 

காவிரி விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கேட்கிறோம் என்று மத்திய அரசு இழுத்தடிப்பதுஏற்புடையதல்ல. எனவே தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்கவும், காவிரியில் தமிழகத்தின் உரிமையைநிலைநாட்டவும் தமிழக அரசு மவுனம் காக்காமல் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளுக்கு உடனடியாக தயாராக வேண்டும்.தமிழக அரசு மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்.  ’’