Skip to main content

முன்னாள் அமைச்சர் வெங்கடாசலம் நினைவு தினம்... அனுமதி மறுக்கப்பட்டதால் தடையை மீறி வாகன அணிவகுப்பு!

Published on 07/10/2020 | Edited on 07/10/2020

 

alangkudi incident


அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆலங்குடி வெங்கடாசலம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் (அக்டோபர் 7) வடகாடு கிராமத்தில் அவரது வீட்டில் வைத்தே ஒரு கும்பலால் வெட்டி சாயக்கப்பட்டார். கை துண்டானது. ரத்தம் வெளியேறிய நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கார் ஓட்டுநரைக் காணவில்லை. இப்படிப் பல தடைகளைத் தாண்டி அவரது மகன் ராஜபாண்டியன் காரில் உயிருக்குப் போராடும் தந்தையை ஏற்றிக் கொண்டு துண்டான கையை காரின் முன்னால் வைத்துக் கொண்டு புதுக்கோட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் சிகிச்சை பலனின்றி வெங்கடாசலம் உயிரழந்தார்.

இந்தச் சம்பவம் புதுக்கோட்டை மாவட்டத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தி பல நாட்கள் போக்குவரத்து முடக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து வடகாடு வரை சுமார் 30 கி.மீ தூரத்திற்கு போலீஸ் பாதுகாப்போடு இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தமிழகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கானோர் வந்து அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர். இந்தக் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்ற ஆதங்கம் அவரது ஆதரவாளர்களிடம் இன்றளவும் உள்ளது.

அதன் பிறகு, அவரது நினைவு நாளை குருபூஜையாக முத்தரையர் மக்கள் கடந்த 9 வருடங்களாக அணுசரித்து வருகின்றனர். அமைசர்கள், தி.மு.க, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள், அரசியல் கட்சிப் பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் குருபூஜைக்கு தமிழகம் முழுவதும் இருந்து வெங்கடாசலம் ஆதரவாளர்கள் வாகனங்களில் அணிவகுத்து வந்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துவதும் அன்னதானம் வழங்குவதும் வழக்கம்.

 

alangkudi incident


இந்த நிலையில் இன்று 10 ஆம் ஆண்டு நினைவேந்தல் அஞ்சலி நிகழ்ச்சி நடத்த அவரது குடும்பத்தினர் அனுமதி கேட்டிருந்த நிலையில், ஊரடங்கு அமலில் இருப்பதால் குடும்பத்தினர் மட்டும் அஞ்சலி செலுத்த அனுமதியளித்தும் மற்றவர்கள் கூட்டம் கூட அனுமதி ரத்து செய்தும் ஆலங்குடி வட்டாட்சியர் கலைமணி உத்தரவிட்டார். மேலும், திருச்சி சரக டி.ஐ.ஜி ஆணிவிஜயா, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி பாலாஜி சரவணன் ஆகியோர் தலைமையில் பாதுகாப்பிற்காக சுமார் 300 போலீசார் நிறுத்தப்பட்டிருந்தனர்.

 

Ad

 

இந்த நிலையில் இன்று நினைவேந்தல் நிகழ்ச்சியில் குடும்பத்தினர் அஞ்சலியை தொடர்ந்து ஆலங்குடி திமுக எம்.எல்.ஏ மெய்யநாதன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள் தனித்தனியாக வந்து அஞ்சலி செலுத்தினார்கள். மதியம் வீரமுத்தரையர் முன்னேற்றச் சங்கம் கே.கே.செல்வகுமார் சுமார் 100 கார்கள், மோட்டார் சைக்கிள்களில் கோஷங்களுடன் கொடிப்பிடித்துக் கொண்டு சென்றனர். சில இடங்களில் செல்வகுமார் தரப்பினரை போலீசார் நிறுத்தி வாகனங்களில் கூட்டமாகச் செல்ல அனுமதி இல்லை என்று கூறினார்கள். ஆனால் தடையை மீறிச் சென்று அஞ்சலி செலுத்தினார்கள். தடை விதிக்கப்பட்டிருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் வந்து அஞ்சலி செலுத்தினார்கள். தடையை மீறி வாகனங்களில் சென்றதால் வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

குஜராத்தில் ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல்! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
worth Rs.300 crore seized in Gujarat

குஜராத் மாநிலம் வழியாக இந்தியாவிற்கு அதிகளவில் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டு வருவது அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குஜராத்தில் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தொடர்ந்து சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் அகமதாபாத்தில் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடங்களை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் கண்டுபிடித்தனர். அப்போது அங்கு இருந்த பல கோடி ரூபாய் மதிப்புள்ள பல்வேறு போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட இதன் மதிப்பு சுமார் ரூ.300 கோடி எனப் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் மதிப்பிட்டுள்ளனர். 7 பேர் கைதான நிலையில், போதைப் பொருள் தயாரிப்புக் கும்பல் தலைவனின் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் என்றும் கூறப்படுகிறது.

நாட்டின் மிகப்பெரிய போதைப் பொருள் தயாரிப்புக் கூடம் கண்டுபிடிக்கப்பட்டு ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக குஜராத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி படகு ஒன்றில் இருந்து 2 ஆயிரம் கோடி மதிப்புள்ள 3 ஆயிரத்து 300 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும், இதே போன்று கடந்த மார்ச் மாதம் 12 ஆம் தேதி  சுமார் ரூ.480 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.