Skip to main content

’’சீட் கொடுக்காவிட்டால் சுயேட்சையாக போட்டி...’’-மிரட்டும் மார்க்கண்டேயன்.!

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

விளாத்திகுளம் தொகுதியில் எப்படியும் மார்க்கண்டேயனுக்குத் தான் 'சீட்' என்று அதிமுக அடிமட்டத் தொண்டர்கள் வரை நம்பி இருந்தனர். ஆனால், இப்போது அதிமுக தலைமை சின்னப்பனுக்கு 'சீட்' என்றதுமே ஜெயிக்கிற தொகுதியை ஏன் விட்டுக் கொடுக்கனும் என பரவலாக பேச்சு அடிபடுகிறது. 

 

'சாதி ரீதியாக பார்த்தால் சின்னப்பனும், மார்க்கண்டேயனும் ஒரே சமூகத்தவர் தான். ஆனால், மார்க்கண்டேயனோட அணுகுமுறை சின்னப்பன்கிட்ட எதிர்பார்க்க முடியாது. உங்க கிட்ட 5 நிமிசம் பேசினார்னா உங்களையே அப்படியே மெஸ்மெரிசம் பண்ணிடுவார் மார்க்கண்டேயன். அதே மாதிரி உதவின்னு கேட்டுப் போனால் உடனே செஞ்சு கொடுப்பார். ஆனா, இவரு (சின்னப்பன்) அதற்கு நேர் மாறான ஆள்' என்று நம்மிடம் ஆதங்கத்தை கொட்டினார் அந்த கிளைச் செயலாளர்.

 

vi

 

அவரே தொடர்ந்து, 'இது பொதுத் தேர்தல் இல்ல தம்பி, இடைத் தேர்தல். ஆளுங்கட்சியாக இருந்துட்டு இதுல தோல்வியடைஞ்சா கட்சிக்கு தான அது அவமானம்.? இந்த பக்கம் புதூர் ஒன்றியத்தில் உள்ள கிராமங்களில் மார்க்கண்டேயனுக்குத் தான் செல்வாக்கு அதிகம். அதேபோல், விளாத்திகுளம் ஒன்றியத்தில பாதி கிராமங்கள்ல இவருக்கு செல்வாக்கு அதிகம். இவருக்குன்னா கட்சிக்காரங்க துணிஞ்சு களத்தில இறங்கி வேலை பார்ப்பாங்க. இப்ப சின்னப்பனுக்கு கோவில்பட்டியில் இருந்து தான் ஆட்களை கூட்டி வந்து மந்திரி கடம்பூரார் வேலை பார்க்கனும். அவங்களுக்கு உள்ளூர் நிலவரம் தெரியுமா? எந்த பார்ட்டி நமக்கு ஓட்டுப் போடும், எந்த பார்ட்டி எதிர்தரப்புக்கு ஓட்டுப் போடும்னு இங்க உள்ள கட்சிக் காரங்களுக்கு தான் தெரியும். வெளியூர் ஆட்களுக்கு என்ன தெரியும்?' என்று எதிர்கேள்வி கேட்டார்.

 

இந்த விவகாரம் குறித்து மார்க்கண்டேயனுக்கு நெருக்கமான நபர் ஒருவரிடம் பேசினோம். 'விளாத்திகுளம் தொகுதியில் அதிமுகவுக்கு என்று செல்வாக்கு இருக்கு. அதை மறுக்க முடியாது. ஆனால், ஜெயிக்கிற வேட்பாளரை நிறுத்தாமல், எதிர் தரப்புக்கு ஏன் தொகுதியை விட்டுக் கொடுக்கிற மாதிரி வேட்பாளரை நிறுத்தனும் என்பது தான் எங்களோட கேள்வி. நிச்சயம் இதை மார்க்கண்டேயன் லேசில விடமாட்டார். ஒன்னு சுயேட்சையாக நிற்பார். இல்லாட்டி, உள்ளடி வேலை பார்த்து தோற்கடிப்பார். இரண்டுல ஏதாவது ஒன்னு நடக்கும். 

 

ஏற்கனவே, இவருக்கும் கடம்பூராருக்கும் ஆகாது. இந்த நிலையில் நேர்காணலுக்கு வந்தவரிடம் மாவட்ட செயலாளர் கடம்பூர் ராஜூவை போய் பார்த்துட்டு வாங்கன்னு கட்சித் தலைமை சொல்லியிருக்கிறது. அப்படி அவர்கிட்ட போய் நின்னு 'சீட்' வாங்க வேண்டிய அவசியமில்லைனு நேரடியாகவே சொல்லிட்டு வந்திட்டார். சி.த.செல்லப்பாண்டியனோ, சண்முகநாதனோ மாவட்ட செயலாளராக இருந்து, வேறு ஒருவருக்கு சீட் கொடுத்தாலும், அதை இவர் (மார்க்கண்டேயன்) ஏத்துக்கிடுவார். ஆனால், கடம்பூரார்கிட்ட தோற்றுப் போவதை ஏற்க மாட்டார்' என்றார்.

 

இதற்கிடையே, சுயேட்சையாக களம் இறங்கவும் மார்க்கண்டேயன் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. இதுகுறித்து ஆலோசிக்க தமது ஆதரவாளர்களை நாளை (19-03-2019) தனது வீட்டிற்கு வரச் சொல்லியிருக்கிறார். அதேபோல், டிடிவி தினகரன் தரப்பும் மார்க்கண்டேயனை தங்களது பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதனால் தான், விளாத்திகுளம் தொகுதியில் வேட்பாளரை அறிவிக்காமல் இருக்கிறது அ.ம.மு.க.!

 

சார்ந்த செய்திகள்

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.