Skip to main content

"ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை" - ஓ.பி.எஸ். விமர்சனம்!

Published on 21/05/2021 | Edited on 21/05/2021

 

admk leader opaneerselvam statement coronavirus prevention

 

தமிழகத்தில் கரோனா ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.

 

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக முன்னாள் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் இன்று (21/05/2021) வெளியிட்டுள்ள அறிக்கையில், "கரோனா என்னும் உயிர்க்கொல்லி தொற்றின் இரண்டாம் அலை தற்போது கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருப்பதையடுத்து, பொதுமக்கள் ஒருவித அச்ச உணர்வோடு வாழ்ந்துகொண்டிருக்கும் அவல நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு இன்னும் துரிதமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையென்றால் தமிழக மக்கள் மிகப்பெரிய ஆபத்தைச் சந்திக்கும் நிலை ஏற்படும்.

 

கரோனா தொற்று நோய் தாக்கினால் ஏற்படும் மனித உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணங்களாக விளங்குபவை ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி இல்லாமை, ஆக்சிஜன் தட்டுப்பாடு, ஆக்சிஜன் சிலிண்டர் பற்றாக்குறை, வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஆகியவைதான். இவற்றைப் போக்க அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருவதாக செய்திகள் வந்துகொண்டிருந்தாலும், யதார்த்த நிலை என்பது வேறாகத்தான் இருக்கிறது. இன்னும் மருத்துவத் தேவை பூர்த்தியாகவில்லை. 

 

இன்றைய நிலவரப்படி, இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகம். இந்த ஆண்டு மே மாதம் ஒன்றாம் நாள் 19,558 என்று இருந்த தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 20/05/2021 அன்று 35,579 ஆக உயர்ந்திருக்கிறது. இதேபோன்று 147 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை, தற்போது 397 ஆக உயர்ந்திருக்கிறது. சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கரோனா தொற்று நோய் தமிழகத்தில் உச்சக்கட்டத்தில் இருக்கிறது. இதுமட்டுமல்லாமல், தினசரி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 20/05/2021 அன்று மாலை நிலவரப்படி 35,579 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25,368 என்ற அளவில்தான் இருக்கிறது.

 

கரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 10/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை இரண்டு வார காலத்திற்கு ஊரடங்கு அறி/விக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தும் வகையில், 15/05/2021 காலை 04.00 மணி முதல் 24/05/2021 காலை 04.00 மணி வரை மேலும் சில புதிய கட்டுப்பாடுகளை விதித்து அரசு உத்தரவிட்டது. ஆனால், இந்த ஊரடங்கு முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றால் நிச்சயம் இல்லை. இதன் காரணமாக, கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்துகொண்டேவருகிறது. ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று கரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28,897 ஆக இருந்தது. ஆனால், இன்று அது 35,579 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல், ஊரடங்கிற்கு முன்பு, அதாவது 09/05/2021 அன்று 236 ஆக இருந்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்று 397 ஆக உயர்ந்துவிட்டது. கரோனா இரண்டாவது அலையில், டெல்லியில் 26,000 ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 3,231 என்ற அளவிற்கு குறைந்துவிட்டது. இவ்வாறு குறைந்ததற்கு காரணம் ஊரடங்கை முழுமையாக நடைமுறைப்படுத்தியதுதான். இதேபோல், மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு நாளைக்கு 65,000க்கும் மேலிருந்த பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 34,031 என்ற அளவுக்கு குறைந்துள்ளது. அதே சமயத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையைவிட மகாராஷ்டிரா மற்றும் டெல்லியில் அதிகரித்துக்கொண்டேவருகிறது.

 

ஊரடங்கு எவ்வளவு முக்கியமோ அவ்வளக்கவ்வளவு தடுப்பூசி போடுவதும் இன்றியமையாதது. தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி, ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 51,52,220 என்றும், இரண்டு முறை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களின் எண்ணிக்கை 19,30,160 என்றும், ஆக மொத்தம் 70,82,380 தடுப்பூசிகள் மட்டுமே போடப்பட்டுள்ளன என்றும், அதே சமயத்தில், மேற்கு வங்காளம், உத்தரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், கேரளா, ஆந்திர பிரதேசம், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்களில் தமிழகத்தைவிட அதிக அளவில் தடுப்பூசிகளை மக்கள் போட்டுக்கொண்டுள்ளார்கள் என்றும் மத்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 

தமிழகத்தில் தற்போது நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலேட்டர்கள் ஆகியவை தங்கு தடையின்றிக் கிடைக்கவும், பெயரளவிற்கு இருக்கிற ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், தடுப்பூசி குறித்த விழிப்புணர்வினை மக்களிடம் எடுத்துச் செல்லவும், தடுப்பூசியினை அதிக அளவில் கொள்முதல் செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தமிழக முதலமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

 

கருப்பு பூஞ்சை நோயினை தொற்று நோயாக தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், 'முளையிலே கிள்ளி எறி' என்ற பழமொழிக்கேற்ப, இந்தத் தொற்றினை ஆரம்பத்திலேயே போக்கும் வகையில் அதற்குரிய மருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுத்து, பாதிக்கப்பட்டவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்று முதல்வரைக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.