
மத்திய அரசு படைக்கல் வாரியத்தை ஏழு சிறு நிறுவனங்களாக பிரிக்க முடிவு செய்துள்ளது. அதனைக் கண்டித்து எல்.பி.எஃப், ஒ.எஃப்.டி உள்ளிட்ட பல்வேறு தொழிலாளர் அமைப்பினர் இன்று (18.06.2021) திருச்சியில் உள்ள மத்திய அரசின் படைக்கல வாரிய தொழிற்சாலை முன்பு போராட்டம் நடத்தினர்.
இதுகுறித்து அவர்கள், “ஆளும் மத்திய பாஜக அரசு இந்திய நாட்டின் பாதுகாப்பில் நான்காவது தூணாக விளங்கும் 220 ஆண்டு பழமையான படைக்கல வாரியத்தை ஏழு சிறு நிறுவனங்களாகப் பிரித்து சிதறடிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதோடு இந்த முடிவானது தொலைநோக்கு பார்வையுடன் கடந்தகால ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட பொதுத்துறையைச் சீரழிக்கும் முடிவு என்பதை மறுக்க முடியாது.
கடந்த காலங்களில் நடந்த பாகிஸ்தான் போர், வங்கதேச போர், சமீபத்தில் நடந்த கார்கில் போர் என இந்திய ராணுவத்திற்குப் படைக்கல வாரியம் ஆற்றிய சேவைகள் நிச்சயமாக பெருமை கொள்ளத்தக்கது. எதிரிகளின் படைபலத்தை எதிர்கொள்வது மட்டுமல்ல, சமீபகாலமாக உலகையே அச்சுறுத்திவரும் கரோனா தொற்றை சமாளிப்பதிலும் அதனை எதிர்த்து போர் புரிவதிலும் படைக்கல வாரியத்தின் பங்கு இன்றியமையாதது.
கரோனா தொற்றை எதிர்த்துப் போரிடும் சூழலில் உலகமே திகைத்து நின்றபோது துணிச்சலுடன் களமிறங்கி மருத்துவர்களுக்கும் களப்பணியாளர்களுக்கும் தேவையான லட்சக்கணக்கான பாதுகப்பு கவச உடைகள், பாதுகாப்பு உபகரணங்கள், சானிடைசர் போன்றவற்றைப் படைக்கல வாரியம் செய்துள்ளது. படைக்கல வாரியத்தையும் சிதைக்கும் நோக்குடனும் அதன் ஊழியர்களை அவமதிக்கும் நோக்குடனும் எடுக்கப்பட்ட மத்திய அரசின் இம்முடிவு வேதனையானது, கண்டிக்கத்தக்கது.
மிகப்பெரிய நிறுவனமான படைக்கல வாரியத்தைப் பிரிப்பதால் தனியார் தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கும் அந்நிய கார்ப்பரேட்டுகளுக்கும் மட்டுமே மகிழ்ச்சி தரக்கூடிய செயலாகும். தற்போது ஏழு நிறுவனங்களாகப் பிரிக்கப்படும் படைக்கல வாரிய தொழிலகங்கள் நாளடைவில் நலிவடைய வாய்ப்புகள் அதிகம். அப்போது அதன் பின்னணியில் இயங்கும் கார்ப்பரேட்டுகள் அதன் சொத்துகளை அடிமாட்டு விலைக்குப் பெற்று கொள்ளை லாபம் ஈட்ட இது வழிவகுத்துவிடும். தொழிற்சாலை நலிவடைந்துவிட்டதைக் காரணம் காட்டி அதில் பணிபுரியும் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.
இதுமட்டுமல்ல தனியார் தளவாட உற்பத்தியில் ஈடுபடும்போது அது முழுக்க லாப நோக்கம் உள்ள நிறுவனமாக மட்டுமே இயங்கும். அங்கே இறையாண்மையும் தேசநலனும் பாதுகாப்பும் கேள்விக்குறியாகிவிடும். தொழில் போட்டி காரணமாக விலை குறைந்த தரமற்ற தளவாடங்கள் உற்பத்தி செய்யப்படும். இதனால் வருங்காலத்தில் போர் வரீர்கள் தரமற்ற காலணிகள், பாதுகாப்பு உடைகள் தரமற்ற பாராசூட்டுகள் கவச வாகனங்கள் மற்றும் தொலைநோக்கிகள் பயன்படுத்தும் நிலை உருவாகும். எனவே இதனைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபட உள்ளோம்” என்று தெரிவித்துள்ளனர்.