![100 new students at the municipal school](http://image.nakkheeran.in/cdn/farfuture/Yr9Qtmm4HPpuz2gzxAs5Syz_AwV4MnO1megJUTFmuMk/1630582849/sites/default/files/inline-images/100th-student.jpg)
சிதம்பரம் மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 195 மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். இந்த நிலையில் கரோனா காலம் என்பதில் பள்ளிகள் இந்த ஆண்டு திறக்கவில்லை. இதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர் சேர்கையில் கடந்த ஜூன் மாதம் தீவிரம் காட்டினார்கள். மானா சந்து நகராட்சி நடுநிலைப்பள்ளி தனியார்ப் பள்ளிகளுக்கு இணையாக இயற்கைச் சூழலுடன் செயல்பட்டு வருவதால் பல்வேறு தனியார்ப் பள்ளிகளில் கல்வி பயின்ற மாணவ, மாணவிகள் அதிகம் பேர் இந்த பள்ளியில் சேர்ந்தனர்.
இந்த கல்வி ஆண்டில் கடந்த 3 மாதத்தில் 100 மாணவர்கள் புதியதாகச் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் 100-வது மாணவர் சேர்க்கை பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.100-வதாக சேர்ந்த மாணவருக்கு குமராட்சி வட்டார கல்விவள மைய அலுவலர் ஜான்சன் புதியசீருடை, புத்தகப் பை, ஜாமன்டரி பாக்ஸ் உள்ளிட்ட கல்வி உபகரணங்களை வழங்கி வாழ்த்துக் கூறினார். இந்நிகழ்ச்சியில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் பாலமுருகன், பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி, உதவி ஆசிரியர்கள் அனுராதா, பிரான்சிஸ்சேவியர், இலக்கிய உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
சிறப்பாகச் செயல்பட்டு அதிக மாணவர் சேர்கையில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு வளமைய மேற்பார்வையாளர் எழுதுகோலைப் பரிசாக வழங்கினார். தற்போது பள்ளியில் 295 மாணவர்கள் கல்விபயின்று வருகிறார்கள். 295 மாணவர்களுக்கு 10 ஆசிரியர்கள் இருக்கவேண்டும் ஆனால் தற்போது 5 ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். எனவே பள்ளிகள் திறந்தவுடன் அரசு மாணவர்களுக்கு ஏற்ற ஆசிரியர்களை நியமித்தால் பள்ளி மேலும் வளர்ச்சி அடையும் என்று ஆசிரியர்கள் மத்தியில் கூறப்படுகிறது.