!["Why do you talk about what is below when there is a Boss above you..." -Edappadi Palaniswami Interview](http://image.nakkheeran.in/cdn/farfuture/ofkWHrsLWRFHv8d2vCEQAp4xYEbU9Uxgz6ugjYb6uMI/1682237272/sites/default/files/inline-images/NM432.jpg)
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனால் எடப்பாடி தரப்பு உற்சாகமாக உள்ளது.
இந்நிலையில் இன்று எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''பாஜகவுடன் கூட்டணி தொடர்கிறது. யார் இல்லை என்று சொன்னார்கள். அண்ணாமலை பற்றி என்னிடம் கேள்வி கேட்காதீர்கள். இதை நிர்ணயிக்கக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா அவர்கள்தான் பாஜகவினுடைய பொறுப்பாளர்கள். ஏங்க மேல பாஸ் இருக்கும்போது கீழே இருக்கிறவங்களை பற்றி ஏன் பேசுறீங்க. இங்க மாறிக்கிட்டே இருப்பாங்க. முன்ன தமிழிசை இருந்தாங்க, அப்புறம் மத்திய அமைச்சர் முருகன் இருந்தாரு, அடுத்து யார் வராங்க யார் போறாங்க அதெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. எங்களை பொறுத்தவரை கூட்டணி என்றால் பிரதமர் மோடி, அமித்ஷா, நட்டா இவர்களோடுதான் பேசிக் கொண்டிருக்கிறோம். 2019ல் இவர்களுடன் பேசினோம். 2021 சட்டமன்றத் தேர்தலிலும் இவர்களுடன் தான் பேசினோம். இங்க இருக்கக்கூடிய மாநில தலைவர்களிடம் எல்லாம் பேசவில்லை. இதுதான் எங்களுடைய நிலைமை''என்றார்.