Skip to main content

“அதிமுக ஆட்சியில் ஊழல்வாதி; திமுகவில் புனிதரா?” - வானதி சீனிவாசன்

Published on 15/06/2023 | Edited on 15/06/2023

 

vanathi srinivasan press statement about minster senthil balaji issue 

 

அமைச்சர் செந்தில் பாலாஜியை நேற்று நள்ளிரவு அமலாக்கத்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று பிற்பகல் 3:30 மணி முதல் விசாரணை நடைபெற்று வருகிறது.

 

இந்நிலையில் பாஜக மகளிர் அணியின் தேசிய தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "பிரதமர் மோடி ஆட்சியில் ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி இருந்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணி நியமனங்களில் முறைகேடுகள் நடந்ததாக, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக குற்றம் சாட்டியது. உச்சநீதிமன்ற உத்தரவின்படி இந்த வாழ்க்கை விசாரித்த அமலாக்கத்துறை, அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ளது.

 

இதே குற்றச்சாட்டுக்காக செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். மத்தியில் வெளிப்படையான, நேர்மையான நிர்வாகத்தை நடத்தி வரும் பாஜக அரசு சட்டத்தின்படியே அனைத்தையும் செய்து வருகிறது. அதன்படிதான் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் இதில் பழிவாங்கும் நடவடிக்கை என பழிசுமத்தி ஊழல் ஒழிப்பு நடவடிக்கையை திசை திருப்பும் முயற்சியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஈடுபட்டுள்ளன. இது கடும் கண்டனத்திற்குரியது. அதிமுகவில் இருந்தபோது ஊழல்வாதியாக இருந்த செந்தில் பாலாஜி, திமுகவில் சேர்ந்து அமைச்சரானதும் புனிதர் ஆகிவிட்டாரா. திமுகவின் முதல் குடும்பத்தினருக்கு நெருக்கமானவர் என்பதால் செந்தில் பாலாஜி குற்றமற்றவர் ஆகிவிடுவாரா.

 

செந்தில் பாலாஜி மீது தவறில்லை என்றால் அதனை நீதிமன்றங்கள் மூலம் நிரூபிக்க அவருக்கு வாய்ப்புள்ளது. அதைவிடுத்து, நாங்கள் என்ன வேண்டுமானாலும் அட்டூழியம் செய்வோம். நடவடிக்கை எடுக்கக் கூடாது. அப்படி நடவடிக்கை எடுத்தாலும் தடுப்போம் என்றால் அதனை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு அனுமதிக்காது. ஊழல்வாதிகள் ஒருபோதும் தப்பிக்க முடியாது. மக்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களை ஏமாற்ற முடியாது என்பதை திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளும் உணர வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்