Skip to main content

“இடைத்தேர்தலில் பணத்தை நம்பி அதிமுக போட்டியிடுகிறது” - டிடிவி தினகரன் 

Published on 20/01/2023 | Edited on 20/01/2023

 

ttv dinakaran talk about admk and erode byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா சமீபத்தில் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக  அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 31ல் வேட்புமனுத் தாக்கல் தொடங்கி, பிப்ரவரி 7 நிறைவடைகிறது. வாக்குப்பதிவு பிப்ரவரி 27 என்றும் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி எனவும் தேர்தல் அறிவிப்பு வந்துள்ளது. 

 

கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக அதிமுக கூட்டணியில் ஈரோடு கிழக்கு தொகுதி, கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான தமாகாவிற்கு ஒதுக்கப்பட்டது. தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜ் 8904 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். இந்தநிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான தேதி அறிவித்ததையொட்டி, தமாக போட்டியிடும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த தொகுதியில் அதிமுகவே நேரடியாக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிமுக சார்பில் கே.வி. ராமலிங்கத்தை களமிறக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டுள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில், மறைந்த திருமகன் ஈவேரா தந்தையும் காங்கிரஸ் மூத்த தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிடவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. 

 

இந்நிலையில், இடைத்தேர்தலில் அமமுக போட்டியிடுவது குறித்து வரும் 27 ஆம் தேதி முடிவு எடுக்கப்படும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், “ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என அமமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர். வரும் 26 ஆம் தேதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவு அறிவிக்கப்படும்.  கடந்த முறை ஈரோடு கிழக்கு தொகுதியில் அமமுக 1000 ஓட்டுகள் மட்டுமே வாங்கியதால் பின்வாங்கமாட்டோம்.  பணபலத்தை நம்பித்தான்  பழனிசாமி தரப்பு அதிமுக போட்டியிடும். பழனிசாமி , பன்னீர்செல்வம் இரு தரப்பினரும் இடைத்தேர்தலில் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னம்  முடக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார். மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை சரி வராது என்றும் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்