Skip to main content

திட்டக்குடியில் த.வா.க. - பா.ம.க. மோதல் இருவர் கைது....

Published on 29/07/2020 | Edited on 29/07/2020
Tittakudi

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ளது குமாரை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த உத்தமராஜா. தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்தவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்துள்ளார். 

 

இவர் பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து முகநூலில் அவ்வப்போது அவதூறு செய்திகள் பதிவிட்டு வந்துள்ளதாக அக்கட்சியினர் கொடுத்த புகாரின்பேரில், ஏற்கனவே இரண்டு முறை உத்தமராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், உத்தமராஜா வெளிநாட்டிலிருந்து சொந்த ஊர் திரும்பினார். அதன் பிறகும் பாமக மீது தொடர்ந்து அவதூறு தகவல்களை பதிவிடுவதாக கூறி உத்தமராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாமக மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் பாமக கட்சியினர் புகார் கொடுப்பதற்காக திட்டக்குடி காவல் நிலையத்திற்கு வந்திருந்தனர். அப்போது பாமகவினர் தன்னை மிரட்டுவதாக கூறி, பாமகவினர் மீது புகார் கொடுப்பதற்காக உத்தமராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக தமிழக வாழ்வுரிமை கட்சியினரும் காவல் நிலையம் வந்திருந்தனர்.

 

அப்போது காவல் நிலையம் எதிரில் இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. உத்தமராஜாவை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி த.வா.க.வினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை அப்புறப்படுத்திய போலீசார், இருதரப்பினரிடமும் புகாரை பெற்று பாமக கிழக்கு ஒன்றிய செயலாளர் நெப்போலியன் மீதும், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த உத்தமராஜா மீதும் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்துள்ளனர்.

 

இரு கட்சியினரின் திடீர் மோதலையடுத்து மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் தடுக்கும் பொருட்டு விருத்தாசலம் டி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் ஏகப்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்