
இன்று (23-04-2021), திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘அச்சம் தவிர்ப்போம், அறிவியலால் வெல்வோம்’ எனும் முன்னெடுப்பின் கீழ் சென்னை எழும்பூர், திரு.வி.க.நகர், வில்லிவாக்கம், கொளத்தூர் ஆகிய தொகுதிகளில் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பு உபகரணங்கள் மற்றும் கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார்.
சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சூளை, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம் காலனி, ஜி.கே.எம் காலனி 34வது தெரு, கே.சி.கார்டன், திரு.வி.க. நகர் மற்றும் வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டன. அதில் கிருமிநாசினி, முகக்கவசம், சோப்பு உள்ளிட்டவற்றோடு கபசுரக் குடிநீர், ஒருவருக்கு 30 முட்டைகள் வீதம் வழங்கப்பட்டன.
அப்போது, கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேகர் பாபு, எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், வேட்பாளர் பரந்தாமன், திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, வில்லிவாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ரங்கநாதன், கொளத்தூர் பகுதிச் செயலாளர்கள் ஐ.சி.எஃப். முரளி, நாகராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.