Skip to main content

11 எம்.எல்.ஏ.க்களையும் உச்சநீதிமன்றம் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யும்: திருமாவளவன் நம்பிக்கை

Published on 28/04/2018 | Edited on 28/04/2018
Thol. Thirumavalavan



11 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்றும், உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்தப் பதினோரு பேரையும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யுமென்று உறுதியாக நம்புகிறோம் என்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளன் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

2017 ஆம் ஆண்டு நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பின்போது திரு எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசுக்கு எதிராக வாக்களித்த ஒ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பதினோரு பேரைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டுமென்று தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிக்கிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
 

ஒரு உறுப்பினர் கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களித்தால் அவரது பதவி பறிக்கப்படும் என கட்சித்தாவல் தடை சட்டம் கூறுகிறது. இதைத் தெரிந்தே ஒ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அப்படி இருந்தும் அவர்கள் மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே தான், திமுகவும் வேறு சிலரும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர்.

 

கொறடா உத்தரவுக்கு மாறாக வாக்களிக்கப்பட்டிருக்கிறதா? அது தகுதி நீக்கத்துக்கு உரியதுதானா ? என்று தான் உயர்நீதிமன்றம் ஆராய்ந்திருக்க வேண்டும். அங்கே வாதாடிய வழக்கறிஞர்களும் அதைத்தான் வலியுறுத்தினார்கள். ஒ.பன்னீர்செல்வமும் மற்றவர்களும் தாங்கள் எதிர்த்து வாக்களிக்கவில்லை என்று மறுப்பு எதுவும் சொல்லவில்லை. எனவே, உயர்நீதிமன்றம் அவர்களைத் தகுதிநீக்கம் செய்திருக்கவேஎண்டும். 
 

சபாநாயகர் தனது பொறுப்பை நிறைவேற்றாதபோது நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கலாம் என்பது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புகளால் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் சாபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. சபாநாயகருக்கு உத்தரவிடும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உள்ளதா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தின் நிலுவையில் உள்ளது என்ற காரணங்களைச் சொல்லி இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருக்கிறது. ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக அரசியலமைப்புச் சட்டம் தமக்கு வழங்கியுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தாமல் தமது பொறுப்பை உயர்நீதிமன்றம் தட்டிக்கழித்திருப்பதாகவே இதைக் கருதத் தோன்றுகிறது.
 

பாஜக முட்டுக்கொடுப்பதால் தான் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் ஆட்சி நீடிக்கிறது என மக்களிடம் பரவலான கருத்து உள்ளது. அதற்காக தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகளில் அது தலையிட்டு செல்வாக்கு செலுத்துகிறது என்றும் மக்கள் கருதுகின்றனர். நீதித்துறைமீதான நம்பிக்கை மட்டும்தான் இப்போது எஞ்சி நிற்கிறது. இத்தகைய தீர்ப்புகளால் அந்த நம்பிக்கையும்கூட பொய்த்துப்போய்விடும் பொலத் தெரிகிறது.
 


இப்போது சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருந்தாலும் உச்சநீதிமன்றம் இந்தப் பதினோரு பேரையும் நிச்சயம் தகுதி நீக்கம் செய்யுமென்று உறுதியாக நம்புகிறோம். ’தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதி’ என்பதை உணர்ந்து உசநீதிமன்றம் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்குமென்று நம்புகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்; நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
Tuticorin incident Court action order

தூத்துக்குடியில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், 22-5-2018 அன்று ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையை நிரந்தரமாக மூடக்கோரி போராட்டம் நடைபெற்றது. அப்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏற்பட்ட உயிரிழப்புகள், காயங்கள் குறித்தும், பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்தும் விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

இந்த ஆணையம் 18-5-2022 அன்று அளித்த அறிக்கையின்மீது, தமிழக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்பட்டன. மேலும் நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விபரங்கள் தமிழக அரசால் வெளியிடப்பட்டது. இதற்கிடையே தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து எடுத்து விசாரித்த வழக்கு, தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் முடித்து வைக்கப்பட்டதை எதிர்த்து மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று (27.03.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில், “இது குறித்த அறிக்கை தயாராகிவிட்டதால் அடுத்த விசாரணையின் போது சமர்ப்பிக்கப்படும்” என பதில் அளிக்கப்பட்டது. இதனையடுத்து தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கை குறித்த விவரங்களை மனுதாரருக்கு அறிக்கையாக தர தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை ஏப்ரல் 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.