Skip to main content

“எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றிருக்கிறார்கள்..” - முன்னாள் அமைச்சர் வீரமணி  

Published on 17/09/2021 | Edited on 17/09/2021

 

"They have gone back with disappointment without getting any evidence." - Former Minister Veeramani

 

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை பகுதியில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்த நிலையில் செப்டம்பர் 16ஆம் தேதி காலை 5.30 மணி முதல் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணியின் வீடு, சகோதரர்கள், உறவினர்கள் வீடு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, ஓசூர், பெங்களூர், சென்னை உள்ளிட்ட 35 இடங்களில் சோதனை நடைபெற்றது. 

 

18 மணி நேரச் சோதனைக்குப் பிறகு ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி.வீரமணி வீட்டிலிருந்து மொத்தம் ரூ.34 லட்சம் ரொக்கம், 1 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பிலான டாலர், ரோல்ஸ் ராயல்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்க நகைகள், 7 கிலோ வெள்ளி, 47 கிராம் வைர நகைகள், 5 கம்ப்யூட்டர் ஹாட்டிஸ்க், வங்கிக் கணக்கு புத்தகங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர். மேலும் 30 லட்சம் மதிப்பிலான 275 யூனிட் மணலும் கணக்கில் வரவழைக்கப்பட்டுள்ளது.

 

சோதனை முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி செய்தியாளர்களைச் சந்தித்துக் கூறியது, “அரசியல் விளம்பரம் தேடச் செய்யப்பட்டது இந்த சோதனை. வரலாற்றில் பல்வேறு சோதனைகளைக் கடந்து வந்துள்ளோம். முன்னாள் அமைச்சர்கள் வீட்டில் சோதனை செய்வது நடைமுறையில் சாத்தியம். அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக 5 ஒன்றிய கழகச் செயலாளர்கள், கழகத்தின் பல்வேறு பொறுப்பாளர்களின் இல்லங்களில் சோதனை நடத்துவது, அடிமட்ட உறுப்பினர்கள் வீட்டில் சோதனை நடத்துவது என்பது இதுவரை அரசியல் வரலாற்றில் இல்லை. 

 

உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்க இருக்கின்றோம். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவதற்காகவே ஆளும் கட்சியினர் ரெய்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். எதையும் நீதி மன்றத்தின் வாயிலாகச் சந்திக்கத் தயாராக உள்ளோம்.

 

இன்றைக்கு நடைபெற்ற சோதனையில் அவர்களுக்கு எந்தவித ஆதாரமும் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றிருக்கிறார்கள். நீதிமன்ற வாயிலாக எந்த வழக்குத் தொடுத்தாலும் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். தேர்தல் களமானாலும், நீதிமன்றமானாலும், மக்கள் மன்றமாக இருந்தாலும் எந்தவிதத்தில் சந்திக்க வேண்டுமோ அதற்குத் தயாராகவே இருக்கிறோம். 50 ஆண்டை கடந்த கட்சி அதிமுக. எதிர்வரும் 100 ஆண்டுகளுக்கும் இயக்கம் வளர்வதற்கும் உறுதுணையாக இருப்போம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது வழக்கு - ஒப்புதல் தர ஆளுநர் மறுப்பு

Published on 01/12/2023 | Edited on 01/12/2023

 

Former Minister K.C. Case against Veeramani' - Governor's refusal to approve

 

தமிழக அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கும், அரசால் அனுப்பப்பட்ட கோப்புகளுக்கும் ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 31 ஆம் தேதி அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

 

இந்நிலையில் நீண்ட நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை முன் விடுதலை செய்யும் விவகாரத்தில் 71 பேரில் 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். 39 பேர் மீது பரிசீலனையில் உள்ளது. ஒருவரை விடுதலை செய்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

 

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகத் தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையும் ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பியுள்ளார். அதேபோன்று அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது ஊழல் வழக்குப் பதிவு செய்ய அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கோப்புகளை அனுப்பி இருந்த நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்ய ஆளுநர் ரவி மறுப்பு தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்ய ஆவணங்கள் குறைவாக உள்ளதாகக் கூறி ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 

 

Next Story

கே.சி. வீரமணிக்கு நெருக்கமான ஆவின் தலைவர்... லஞ்ச ஒழிப்புத்துறையின் அடுத்த அதிரடி!

Published on 24/09/2021 | Edited on 24/09/2021

 

Anti-corruption check at Vellore Avin office

 

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஆவின் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். வேலூர் - திருவண்ணாமலை மாவட்டங்களை ஒருங்கிணைக்கும் ஆவின் அலுவலகத்தில், கடந்த ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றுவருகிறது. கடந்த 16ஆம் தேதி வேலூரில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அங்கு முக்கிய ஆவணங்கள், 34 லட்சம் ரூபாய் பணம், நகைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

 

முன்னாள் அமைச்சர் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம், நகை ஆகியவை கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தின் ஜெ.எம். ஒன்று நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன. மேலும், லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய விசாரணையில் இந்த வேலூர் ஆவின் நிறுவனத்தின் தலைவர் வேலழகன், கே.சி. வீரமணிக்கு நெருக்கமானவர் என்று கூறப்படுகிறது.  அதனடிப்படையில் தற்போது இந்த சோதனை நடைபெற்றுவருகிறது.