Skip to main content

உங்களை பார்த்து எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள்... தமிழக எம்பிக்களுக்கு நாஞ்சில் சம்பத் செய்தி...

Published on 18/06/2019 | Edited on 18/06/2019

 

17வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக, காங்கிரஸ், அதிமுக வேட்பாளர்கள், நாடாளுமன்ற மக்களவையில் இன்று மக்களவை உறுப்பினர்களாக பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர். அப்போது அனைவரும் தமிழில் பதவிப் பிரமாணம் ஏற்றுக்கொண்டனர்.


 

திமுக எம்பிக்கள் பதவியேற்பின்போது தமிழ் வாழ்க, கலைஞர் வாழ்க, பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க என்றனர். காங்கிரஸ் எம்பிக்கள் அனைவரும் காமராஜ் வாழ்க, ராஜிவ் காந்தி வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். கம்யூனிஸ்ட் வேட்பாளர்கள் அனைவரும் உலக தொழிலாளர்கள் வாழ்க, தமிழ்நாடு வாழ்க என்று பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர்கள் வாழ்க பெரியார், வாழ்க அம்பேத்கார் என்று பதவி ஏற்றனர். ஐஜேகே பார்வேந்தர் தமிழ் வாழ்க, இந்தியாவும் வாழ்க என்றார். அதிமுக எம்பி ரவீந்திரநாத் குமார், வாழ்க புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., வாழ்க புரட்சித் தலைவி அம்மா, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என்றார்.

 

Nanjil Sampath


 

இதுகுறித்து நக்கீரன் இணையதளத்திடம் கருத்தினை பகிர்ந்துகொண்டார் இலக்கியவாதியும், நடிகருமான நாஞ்சித் சம்பத்.
 

''மதசார்பற்ற கூட்டணியில் வெற்றி பெற்ற திமுக தலைமையிலான 38 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்று என்ன செய்யப்போகிறார்கள் என்று கேலி பேசியவர்கள் உண்டு. கிண்டல் புரிந்தவர்கள் உண்டு. அறுதிப் பெரும்பான்மையோடு பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்ட காரணத்தினால் இவர்கள் ஒரு அடி எடுத்து வைக்க முடியாது என்று சபித்தவர்கள் உண்டு. 
 

ஆனால் இன்றைக்கு தமிழினத்தினுடைய மீட்பு வரலாற்றில் இந்த நாள் ஒரு நல்ல நாள். திமுக சார்பில் வெற்றி பெற்றவர்களும், தோழமை கட்சிகளின் சார்பில் வெற்றி பெற்றவர்களும் தமிழில் பதவி பிரமாணம் எடுத்ததும், தேசிய காப்பு பிரமாணத்தை தமிழில் சொன்னதும் பெரியார் வாழ்க, அண்ணா வாழ்க, கலைஞர் வாழ்க என்று நாடாளுமன்றத்தில் முழங்கியதும் இன்றைக்கு தமிழர்கள் எப்பொழுதும் தனித்துவம் உள்ளவர்கள், எங்களை தவிர்க்கவும் முடியாது, எங்களை தகர்க்கவும் முடியாது என்பதை முதல் நாளிலேயே இன்று முரசு அறைந்ததைப்போலவே அறைந்து நிரூபித்திருக்கிறார்கள். 


 

அதிமுக சார்பில் வாகை சூடிய தம்பி ரவீந்திரநாத் குமாரும் தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்தது மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி. அவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
 

வாகை சூடி தமிழில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு என் வாழ்த்துகளை எடுத்துக்கொள்கிற அதே நேரத்தில், ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால், மிக அழகாக அண்ணா சொல்வார், டெல்லியோடு மோத டெல்லியோடு யுத்தம் செய்ய டெல்லியில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை உடைத்து நொறுக்க திமுக ஒரு படைக்கலனை அனுப்புகிறது என்று சொன்னார். அந்த படைக்கலனாக நீங்கள் மிளிர்வீர்கள். எதிரிகள் தொடை நடுங்கிப் போவார்கள். தமிழினத்தினுடைய உரிமையை மீட்டெடுக்கிற வரலாற்று பயணத்தில் ஒரு மிகப்பெரிய வெற்றியை சாதிக்கப்போகிற நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாஞ்சில் சம்பத்தின் வாழ்த்துக்கள்''. 


 

சார்ந்த செய்திகள்