
அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று (09.03.2023) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடத்துவது, ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தோல்வி மற்றும் அதிமுக - பாஜக மோதல் குறித்தும் விவாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்கூட்டத்திற்கு செல்லும் முன் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "எங்கள் கட்சியிலிருந்து பாஜகவில் சேரும்போது இனித்தது. இப்பொழுது அங்கிருந்து இங்கு வரும் பொழுது கசக்கிறதா. பா.ஜ.க.விற்கு சகிப்புத்தன்மை வேண்டும். வாயடக்கம் தேவை. வாய்க்கொழுப்புடன் பேசக்கூடாது. மத்தியில் ஆளுகிறோம் என்னும் திமிருடன் பேசக்கூடாது. அதுதான் எங்களது கருத்து. கூட்டணிக் கட்சிகளின் தோளில் உட்கார்ந்து கொண்டு காதைக் கடிப்பதை அதிமுக என்றைக்கும் பொறுத்துக்கொண்டு இருக்காது.
எடப்பாடி பழனிசாமியின் உருவப்படத்தை எரிக்கிறார்கள். அந்த அளவிற்கு பாஜக தரம் தாழ்ந்துவிட்டது. ஒரு காலத்தில் பாஜக மதிக்கக் கூடியதாக இருந்தது. அண்ணாமலை வாய்க்கொழுப்போடு பேசுவதாகத் தெரிகிறது. மத்தியில் ஆட்சியில் இருக்கிறார்கள் என்ற எண்ணம் தான் காரணம். ஜெயலலிதாவுடன் ஒப்பிட்டுப் பேசுவதற்கு தகுதியே கிடையாது. அண்ணாமலைக்கு நாவடக்கம் தேவை. ஜெயலலிதாவைப் போல் யாரும் பிறக்கவும் இல்லை. இனி பிறக்கவும் முடியாது. ஊர்க்குருவி உயர உயர பறந்தாலும் பருந்தாக முடியாது” எனக் கூறியிருந்தார்.