Skip to main content

“இத்தனை மரணச் செய்திகளுக்கு மத்தியில் விழா தேவையா?” - ராஜேஸ்வரிபிரியா     

Published on 26/05/2021 | Edited on 26/05/2021

 

Politician Rajeshwaripriya condemn Udhayanidhi Stalin


இந்தியாவில் கரோனாவின் இரண்டாம் அலை மிகத் தீவிரமாக இருந்துவருகிறது. தமிழகத்திலும் கரோனாவின் தாக்கம் அதிகளவில் இருக்கிறது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பல்வேறு மாவட்டங்களில் மருத்துவமனைகளில் படுக்கை வசதியில்லாமல் மக்கள் அவதிக்குள்ளாகிவந்த நிலையில், தமிழக அரசு புதிதாக தற்காலிக கரோனா பாதுகாப்பு மையங்களை அமைத்துவருகிறது. மேலும், கரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கையும் அறிவித்துள்ளது. மேலும், மக்களும் அதிகளவில் எங்கும் கூடக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளது. 

 

இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் ஆயுர்வேத கரோனா சிகிச்சை மையத்தை சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார். இதில், அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கப்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

 

கரோனா நேரத்தில் அதிகளவில் கூட்டம் கூடி இந்த திறப்பு விழா நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்து, அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பில் அக்கட்சியின் நிறுவன தலைவர் மூ. ராஜேஸ்வரிபிரியா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “இன்று (26/05/2021) சென்னை ஆழ்வார்பேட்டையில் 50 படுக்கைகள் கொண்ட ஆயுர்வேத சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார்,  ச.ம.உ உதயநிதி ஸ்டாலின். 

 

Politician Rajeshwaripriya condemn Udhayanidhi Stalin

 

தனிமனித இடைவெளி இல்லாமல் இப்படி ஒரு திறப்பு விழா நிகழ்வு ஊரடங்கு சமயத்தில் தேவையா? திரும்பும் திசையெல்லாம் மரண ஓலம் கேட்கும் இன்றைய சூழலில் விழா வைத்து திறக்க வேண்டுமா? எப்போது மாறும் இந்த ஆடம்பர அரசியல். நீங்கள் மக்களுக்கு எடுத்துகாட்டாக இருக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட்டால்தான் மக்களைக் காக்க முடியும்.

 

5 பேருக்கு மேல் எந்த நிகழ்விலும் கலந்துகொள்ள கூடாது என்றும் தனிமனித இடைவெளி அவசியம் என்றும் அனாவசியமான விழாக்கள் தேவையில்லை என்றும் அறிவிக்குமாறு அனைத்து மக்கள் அரசியல் கட்சி சார்பாக முதல்வருக்கு கோரிக்கையாக வைக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்