



நாடாளுமன்றத் தேர்தலுக்காக விருப்ப மனு அளித்தவர்களிடம் திமுக மற்றும் அதிமுக தற்போது நேர்காணலை துவங்கியுள்ளது. அதோடு தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ள கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதி என்று திமுகவும், அதிமுகவும் அறிவிக்கவில்லை. இந்த நிலையில் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் பாரிவேந்தருக்கு வாக்களிக்குமாறு ஐ.ஜே.கே. கட்சியைச் சேர்ந்தவர்கள் போஸ்டர் அடித்து வாட்ஸ் அப்புகளில் பரப்புகின்றனர்.
இதேபோல் கள்ளக்குறிச்சியில் போட்டியிடும் பொன்.கௌதமசிகாமணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது திமுக ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து வாட்ஸ் அப்புகளில் பரப்பி விட்டுள்ளனர். வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் டி.எம். கதிர் ஆனந்த்துக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவரது திமுக ஆதரவாளர்கள் போஸ்டர் அடித்து பரப்பி வருகின்றனர்.
வேலூர் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஜெ.கே.என்.பழனிக்கு வாக்களிக்க வேண்டும் என்றும், குடியாத்தம் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் ஆர்.மூர்த்திக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் அவர்களுடைய அதிமுக ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடித்து வாட்ஸ் அப்புகளில் பரப்பிவிட்டுள்ளனர்.
இதுபோன்ற போஸ்டர் அலப்பறைகளை ஒவ்வொரு கட்சியினரும் புகாராக ஆதாரத்துடன் கட்சியின் மேலிடத்திற்கு புகாராக அனுப்பி வருகிறார்கள்.