![pmk gk mani mla talks about balveer singh incident at assembly](http://image.nakkheeran.in/cdn/farfuture/qWfHGtpYazUW2OKBVZEyF9omwROgM-F0En_BpTN49a4/1682063484/sites/default/files/inline-images/g-k-mani-art.jpg)
2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான மானியக் கோரிக்கைகளின் மீது விவாதமும் வாக்கெடுப்பும் நேற்று சட்டப் பேரவையில் நடைபெற்றது.
காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் மற்றும் அவற்றின் மீது முன்மொழியப்பட்ட தீர்மானங்கள் ஆகியவற்றின் மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை கொடுத்து உரையாற்றினார். இந்நிலையில் பாமகவை சேர்ந்த பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி, காவல் மற்றும் தீயணைப்புத்துறை மானியக் கோரிக்கைகள் விவாதத்தில் கலந்து கொண்டு பேசுகையில், "மக்கள் நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் காவல்துறையினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு சட்ட திட்டங்கள் நிறைவேற்றப்படுகிறது. பல்வேறு துறை வளர்ச்சிக்கு ஒதுக்கப்படும் நிதியை தொகுதி மேம்பாட்டு நிதிக்கு பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும்.
மேலும் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் பல் உடைக்கப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி பல்வீர் சிங் இன்னும் கைது செய்யப்படவில்லை. விசாரணை தான் நடந்து கொண்டிருக்கிறது. அரசு ஊழியர்கள் ஊதியத்துக்காக பணியாற்றாமல் நாட்டுக்காக பணியாற்ற வேண்டும். தமிழகத்தில் போதைப் பொருளை ஒழிக்க தனிப்படை அமைக்க வேண்டும்" என்று பேசினார்.