Skip to main content

தேர்தல் அதிகாரிக்கு கூடுதல் பதவி! அதிர்ச்சியில் ஐ.ஏ.எஸ்.கள்! 

Published on 23/04/2018 | Edited on 23/04/2018

தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரியாக இருந்த ராஜேஷ் லக்கானி, அப்பணியிலிருந்து தன்னை விடுவிக்குமாறு டெல்லியிலுள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் இரு மாதங்களுக்கு முன்பு அவர் விடுவிக்கப்பட்டார். புதிய தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரியாக மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சத்யபிரதாசாகுவை நியமித்தது இந்திய தேர்தல் ஆனையம்.   

 

Satya

 

மெட்ரோ வாட்டர் நிறுவன நிர்வாக இயக்குநர் பதவி காலியாகவே வைக்கப்பட்டிருந்தது. இரண்டு மாதங்களாக அப்பதவி நிரப்பப்படவில்லை. இந்தநிலையில், தற்போது அப்பதவியை சத்யப்பிரதாசாகுவிடமே கூடுதல் பொறுப்பாக கொடுத்துள்ளது எடப்பாடி அரசு. இத்தகைய முடிவு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

 

இதுகுறித்து நம்மிடம், "தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி என்பவர் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். தலைமைத் தேர்தல் ஆணையமும், தேர்தல் அதிகாரிகளும் தன்னிச்சையாக இயங்கும் வகையில் அவர்களுக்கு அதிகாரம் தரப்பட்டுள்ளது. தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டதற்குப் பிறகு அவர் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரமாட்டார். இப்படிப்பட்ட நிலையில், தமிழக தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்ட சத்யப்பிரதாசாகுவிடம் மெட்ரோ வாட்டர் நிர்வாகத்தைக் கூடுதல் பொறுப்பாக தந்திருப்பது தவறானது. மேலும், தேர்தல் அதிகாரியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முயற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை (20.04.2018)  கூடுதல் பொறுப்பை மிக ரகசியமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார் சத்யபிரதாசாகு. அவரிடம் கூடுதல் பொறுப்பு தரப்பட்டிருப்பது தலைமைத் தேர்தல் ஆணையர்களுக்குத் தெரிவிக்கப்படவில்லை.  இதன் பின்னணியில் பல வில்லங்கங்கள் இருக்கிறது" என்கிறார்கள் நேர்மையான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள்.

 

விரைவில் பூதாகரமாக வெடிக்கவிருக்கிறது ரகசியமாக நடந்திருக்கும் இந்த விவகாரம்.

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் ஆணையர் தமிழகம் வருகை

Published on 15/02/2024 | Edited on 15/02/2024
Chief Election Commissioner visits Tamil Nadu

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இந்தியத் தேர்தல் ஆணையமும் தேர்தல் தொடர்பான பணிகளை விரைவுபடுத்தி உள்ளது.

இந்த சூழலில் தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கடந்த 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தேர்தல் ஆணையத்தின் துணை தேர்தல் ஆணையர் அஜய் பாது தலைமையிலான தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழுவினர் தமிழகம் வந்திருந்தனர். இந்த குழுவினர் சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு மற்றும் தேர்தல் ஆணையத்தின் முதன்மைச் செயலாளர் மலய் மாலிக் ஆகியோர் முன்னிலையில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் காவல்துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், தொழிலக பாதுகாப்புப் படை வீரர்கள், மாவட்ட ஆட்சியர்கள் கலந்துகொண்டனர்.

இதனையடுத்து தமிழகத்திற்கு கூடுதலாக 3 தேர்தல் அதிகாரிகளை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி மூத்த ஐஏஎஸ் அதிகாரியான சங்கர்லால் குமாவத் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரியாகவும், இணைத் தலைமை தேர்தல் அதிகாரிகளாக ஸ்ரீகாந்த், அரவிந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில் பிப்ரவரி 23 ஆம் தேதி இந்தியத் தேர்தல் தலைமை ஆணையர் ராஜீவ் குமார் தமிழகம் வருகிறார். இவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர். 

Next Story

நாடாளுமன்ற தேர்தலுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Published on 22/01/2024 | Edited on 22/01/2024
Publication of the final voter list for the parliamentary elections

கடந்த ஜனவரி 1 ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம், 2024-ன் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியல் இன்று (22.01.2024) வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “சிறப்பு சுருக்க முறைத் திருத்தத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி தமிழ்நாட்டில் 6 கோடியே 18 லட்சத்து 90 ஆயிரத்து 348 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அதில் ஆண் வாக்காளர்கள் 3 கோடியே 3 லட்சத்து 96 ஆயிரத்து 330 பேரும், பெண் வாக்காளர்கள் 3 கோடியே 14 லட்சத்து 85 ஆயிரத்து 724 பேரும் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் 8 ஆயிரத்து 294 பேரும் ஆவர். இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்த காலத்தின்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தலுக்காக 13 லட்சத்து 88 ஆயிரத்து 121 விண்ணப்பங்கள் பெறப்பட்டு அவற்றில் 13 ல்டசத்து 61 ஆயிரத்து 888 விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அதில் ஆண்கள் 6 லட்சத்து 17 ஆயிரத்து 623 பேரும், பெண்கள் 7 லட்சத்து 43 ஆயிரத்து 803 பேரும், மூன்றாம் பாலினத்தவர் 462 பேரும் ஆவர்.

செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட சோழிங்கநல்லூர் சட்டமன்றத் தொகுதி தமிழ்நாட்டிலேயே அதிக வாக்காளர்களைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உள்ளது. குறைந்த அளவு வாக்காளர்கள் கொண்ட தொகுதியாக நாகப்பட்டினம் மாவட்டத்திற்குட்பட்ட கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதி உள்ளது. இதற்கு அடுத்தப்படியாக இரண்டாமிடத்தில் சென்னை மாவட்டத்திற்குட்பட்ட துறைமுகம் சட்டமன்றத் தொகுதி உள்ளது. சிறப்பு சுருக்கமுறைத் திருத்தத்தின்போது, பெயர் சேர்த்தலுக்காக பெறப்பட்ட மொத்தப் படிவங்களில், 18 வயது முதல் 19 வயதுள்ள 5 லட்சத்து 26 ஆயிரத்து 205 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.