ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 7 அடி உயரம் கொண்ட ஜெயலலிதாவின் முழு உருவ வெண்கல சிலை கடந்த 24.2.18 அன்று வைக்கப்பட்டது. இந்த சிலை ஜெயலலிதா முகசாயலில் இல்லை என்று பலர் குறை கூறினர்.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதாவுக்கு புதிய சிலை அமைக்க முடிவு செய்து ஆந்திராவை சேர்ந்த ராஜ்குமார் என்ற சிற்பியிடம் சிலையை வடிவமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த சிலை தயாராகி ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. சிலை நிறுவும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
ஜெயலலிதாவுக்கு புதிய சிலை வைக்கப்படுவதால் எம்.ஜி. ஆருக்கும் புதிய சிலை வைக்க முடிவெடுத்து, அதற்காக எம்.ஜி.ஆர். சிலையும் ஆந்திராவில் தயாராகி வருவதாகவும், அந்த சிலையும் இன்னும் ஓரிரு நாளில் தலைமை கழகத்துக்கு வருவதாகவும் கூறப்படுகிறது.