
திமுக கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட தேனி அல்லிநகரம் நகராட்சித் தலைவர் பதவியை தற்போது பொறுப்பேற்ற ரேணுப்பிரியா ராஜினாமா செய்ய மறுத்ததால் கட்சியைவிட்டு நீக்கப்படுவார் என்ன வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வன் எச்சரித்துள்ளார்.
திமுக கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய தேனி நகராட்சித் தலைவர் பதவியில் திமுக நகர பொறுப்பாளர் பாலமுருகனின் மனைவி ரேணுப்பிரியா பொறுப்பு ஏற்றார். ஆனால், கட்சித் தலைமை உத்தரவிட்டும் அவர் ராஜினா செய்யாமல் அடம் பிடித்து வருகிறார். இதுகுறித்து மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வனும் கவுன்சிலருடன் ஆலோசனை நடத்தினார். பதவியை ராஜினாமா செய்ய நேற்று வரை தங்க தமிழ்ச்செல்வன் கெடு விதித்தார். அவரது வருகைக்காக அலுவலகத்தில் காத்திருந்தார். ஆனாலும், அவருடைய கணவர் பாலமுருகன் வரவில்லை.

இதுகுறித்து வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்கதமிழ்ச்செல்வனிடம் கேட்டபோது, “தலைவர் பதவியை ராஜினாமா செய்யாமல் இருந்து வருவதால் பாலமுருகனும் அவருடைய மனைவியும் கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்படும் சூழ்நிலையில் இருக்கிறார்கள். அதுபோல் ஏற்கனவே நகர்மன்ற துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட செல்வம் தொடர்ந்து துணை தலைவராக நீடிப்பார்” என்று கூறினார்.