Skip to main content

''ஓபிஎஸ் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும்'' - முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேச்சு!

Published on 26/07/2022 | Edited on 26/07/2022

 

"How long will it take to loot your house"-former minister Udayakumar's speech at the protest!

 

மின்சார கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு, சட்டம் ஒழுங்கு சீர்கேடு ஆகியவற்றை கண்டித்து அ.தி.மு.க.சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதை தொடர்ந்து இன்று ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டத்தில் ஆளுங்கட்சியை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம்  நடத்துவதற்காக 5000 க்கும் மேற்பட்டவர்களை திரட்டி தேனி பங்களாமேட்டில் ஓபிஎஸ்க்கு எதிராக பெரும் கூட்டத்தை திரட்டினார். இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளர் உதயகுமார் தி.மு.க. அரசை கண்டித்து நடந்த போராட்டத்தை மறந்து முழுக்க முழுக்க ஓ.பன்னீர்செல்வத்தை  பற்றியே குற்றம் சாட்டினார்.

 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆர்.பி.உதயகுமார் பேசும்போது, ''காலை 10 மணிக்கு தொடங்க வேண்டிய ஆர்ப்பாட்டம் போலீஸாரின் கெடுபிடியால் தாமதாகிவிட்டது. தேனி நகரில் கூட்டம் அதிகமாக உள்ளது. அந்தக் கூட்டம் கலையட்டும் அதன்பிறகு செல்லலாம் எனப் போலீசார் தடுத்து நிறுத்துகின்றனர். அதுமட்டுமில்லாது ஒபிஎஸ் தரப்பிலிருந்து வேறு தேனிக்குள் எப்படி வருகிறார்கள் எனப் பார்க்கலாம் என மிரட்டல் விடப்பட்டிருக்கிறது. இங்கு கூடியிருக்கிற கூட்டத்தை கட்டுப்படுத்த ஸ்டாலின் உத்தரவிட்டாரா, அல்லது ஓ.பி.எஸ் தூண்டுதலா எனத் தெரியவில்லை. எதிர்க்கட்சியை முடக்கும் ஆளும் கட்சியின் கைக்கூலிகளாக இருப்பவர்களை கண்டிக்கிறேன். ஐந்து மாவட்டங்களின் நீராதாரமாகத் திகழும் முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுபவர்கள் தேனி மாவட்ட மக்கள். அப்படி விஸ்வாசமான மக்கள் உள்ள தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக்கிறது.
 

 

"How long will it take to loot your house"-former minister Udayakumar's speech at the protest!

 


ஏற்கெனவே தர்மயுத்தம் நடத்தியவர், தற்போது துரோகயுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறார். அவர் சிரிப்பு மர்ம சிரிப்பாக இருக்கிறது. துரோக சிரிப்பாக இருக்கிறது. அவரின் சிரிப்பு என்ன அர்த்தம் என கண்டுபிடிக்க முடியவில்லை. அந்தச் சிரிப்பை நம்பியதால் தான் துரோகத்துக்கு ஆளாகியுள்ளோம். அவர் பதவிக்கு ஆபத்து என்றால் தர்மயுத்தம் நடத்துவர், தொண்டர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் கண்டுகொள்ள மாட்டார். அதிமுகவினர் மீது பொய்வழக்கு போடும் திமுகவை பார்த்து கும்பிடுகிறார். அவரது மகனோ முதல்வரைச் சந்தித்து திமுக ஆட்சி சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார்.

 

திமுகவை எதிர்த்து தான் அதிமுக தொடங்கப்பட்டது. ஆனால் அவர்களின் ஆட்சியை பாராட்டுபவர்களுக்கு இங்கு என்ன வேலை. அப்பாவுடன் சேர்ந்து போய் அங்கேயே சேர்ந்துவிடலாமே.  ஒன்றே ஒன்று கண்ணே கண்ணு என நமக்கு கிடைத்த அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றிக்கு ரவீந்திரநாத் காரணம் இல்லை.‌ இங்குள்ள ஒவ்வொரு தொண்டனின் உழைப்பு. ரவீந்திரநாத்-திற்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். 

 

டெல்லியில் ஜனாதிபதி பிரிவு உபசார விழாவிற்கு அதிமுகவின் முகமாக  அழைக்கப்பட்டவர் எடப்பாடி பழனிச்சாமி மட்டுமே. ரவீந்திரநாத்திற்கு அழைப்பு இல்லை. எதிரிகள் துரோகிகளை வீழ்த்துவதற்கு தற்போது தேனியில் கூட்டம் தன்னெழுச்சியாக கூடியுள்ளனர்.‌ மக்கள் ஆதரவு இல்லாததால் தேனியில் உள்ள வீட்டை ஓ.பி‌.எஸ் காலி செய்து விட்டு மாலத்தீவிற்கு இடம் பெயர்ந்து விடுவார். கட்சியில் சீர்திருத்த நடவடிக்கைகளை எடுக்க 99 சதவீதம் பேர் ஆதரவளித்தனர்.‌ ஆனால் ஓ.பி.எஸ்  அதற்கு மறுப்பு தெரிவித்து முட்டுக்கட்டை போட்டு வந்தார். தற்போது கட்சியில் உள்ள நிர்வாகிகளை நீக்கி வருவதை பார்த்தால் இறுதியில் ஓ.பி.எஸ் மற்றும் அவருடன் இருக்கும் சில பேர் மட்டுமே எஞ்சியிருப்பர். அதிமுக தலைமை கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும் எனத் தெரியவில்லை.

 

அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்ட பின் உடனடியாக வருவாய்த் துறையினர் வந்து சீல் வைத்தது எப்படி. எனக்கு 10 வருடமாக வருவாய்த் துறை அமைச்சராக நான் இருந்தபோது அவ்வளவு விரைவில் செயல்பட்டதில்லை. ரவுடிகளுடன் அதிமுக தலைமைக் கழகத்திற்கு வந்தவர்கள் கொள்ளையர்கள். அங்கிருந்த பொருட்கள், ஆவணங்களை திருடி சென்றுள்ளனர். திமுக பார்த்து இருக்க வேண்டும். அறிவாலயத்திலும் திருட வருவார்கள். முதலமைச்சர் வேட்பாளர் அறிவிப்பின் போது 11நாட்கள் மௌன விரதம் இருந்தார். அதனால் 5 சதவீதம் வாக்கு குறைந்தது. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அறிவிக்கவே தயங்கினார். அவருடைய போடி தொகுதியை தவிர பக்கத்து தொகுதிக்குக் கூட சென்று பிரசாரம் செய்யவில்லை. ஆனால் எடப்பாடி பழனிசாமி அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வரவேண்டும் என தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்தார்.

 

 சேலம், கோவை உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில் உயர்மட்ட மேம்பாலங்கள் என கடந்த 4, ஆண்டுகளில் வளர்ந்துள்ளது. ஆனால் மூன்று முறை முதலமைச்சர், ஒரு முறை துணை முதலமைச்சராக இருந்த தேனியில் ஒரு மேம்பாலம் கூட கட்டவில்லை. நீங்கள் மட்டும் வீடு மேல் வீடு காடு மேல் காடு, தீவு என ஓ.பி.எஸ் மட்டும் சொத்து சேர்த்தார்.  பொதுக்குழு கூடிய போது தேனி மாவட்டம் முழுவதும் வந்து எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளித்தனர். அவர் தேனி வரும் இதேபோல அலைகடலென திரண்டு வரவேற்பளிக்க காத்திருங்கள்'' என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.