Skip to main content

“ஸ்டாலின் பொய் பேசுவதில் கைதேர்ந்தவர்,நோபல் பரிசு வழங்கலாம்” - எடப்பாடி பழனிச்சாமி

Published on 20/03/2021 | Edited on 20/03/2021
EPS spoke that stalin was expert in  speaking lie

 

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சூறாவளி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று கடலூர் வேட்பாளர் அமைச்சர் எம்.சி.சம்பத், பண்ருட்டி அதிமுக வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், நெய்வேலி பாமக வேட்பாளர் கோ.ஜெகன், குறிஞ்சிப்பாடி அதிமுக வேட்பாளர் செல்வி ராமஜெயம், புவனகிரி அதிமுக வேட்பாளர் அருண்மொழித்தேவன், விருத்தாச்சலம் பாமக வேட்பாளர் ஜெ.கார்த்திகேயன், திட்டக்குடி பா.ஜ.க வேட்பாளர் து.பெரியசாமி ஆதரித்து பிரச்சாரம் செய்தார். 

 

பிரச்சாரக் கூட்டங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது: “அ.தி.மு.க கூட்டணி உழைக்கும் கூட்டணி, உழைப்பதற்கு பிறந்தவர்கள் வெயில் என்று பாராமல் பாடுபவர்கள். தி.மு.க கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி, ஆனால் அ.தி.மு.க கூட்டணி வளர்ச்சிக்கு பாடுபடும் கூட்டணி. மு.க.ஸ்டாலின் பொய் பேசுவதில் கைதேர்ந்தவர், அதில் அவருக்கு நோபல் பரிசு வழங்கலாம். மூட்டை மூட்டையாக பொய் பேசுவார்.நான் ஒரு விவசாயி கஷ்டப்பட்டு பதவிக்கு வந்தவன். வெயில் மழை என்று பாராமல் விவசாய நிலத்தில் பாடுபட்டு பயிர் செய்தவன். ஆனால் மு.க.ஸ்டாலின் இதுபோன்ற செய்ய சொல்லுங்கள்.

 

வேளாண்மை சட்டம் என்பது தமிழக மக்களுக்கு புரியவில்லை, அந்த சட்டத்தால் இடைத்தரகர்களுக்குதான் தான் பாதிப்பு. இடைத்தரகர்களை தூண்டிவிட்டு பிரச்சனையை பெரிதாக்கின்றனர், அந்த சட்டத்தினால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. விவசாயிகளுக்கு அவர்கள் விளைவித்த பயிர்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும், அதுவே நம்முடைய லட்சியம். விவசாயிகள் பாதிப்படைந்த நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் நிவாரணம் வழங்கி உள்ளோம். பயிர்க் கடன் தள்ளுபடி, கூட்டுறவு கடன் தள்ளுபடி செய்தது அதிமுக அரசு. மீண்டும் அதிமுக தலைமையில் அமைந்துள்ள கூட்டணி வெற்றி பெற்றால் கல்விக் கடனையும் தள்ளுபடி செய்யும். கேபிள் இலவசமாக வழங்கப்படும், ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். 

 

EPS spoke that stalin was expert in  speaking lie

 

மாதந்தோறும் குடும்பத் தலைவிக்கு 1500 வழங்கப்படும், ஆண்டு தோறும் பொங்கல் பரிசு வழங்கப்படும். ஸ்டாலின் குடும்பம் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடியாய் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வாக்கு வாங்கலாம் என்றும், ஆட்சியை பிடிக்கலாம் என்றும் பகல் கனவு காண்கிறார்கள்.  ஆனால் நாம் இப்போது தேர்தல் அறிக்கையில் வருடத்திற்கு 6 சிலிண்டர், குடும்ப தலைவிக்கு 1500, வாஷிங் மெஷின் போன்ற மக்களுக்கு தேவையான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளோம். ஆனால் தி.மு.க தலைவர் ஸ்டாலினிடம் அதுபோன்ற திட்டங்கள் எதுவும் கிடையாது.  தி.மு.க தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசு மத்திய அரசுக்கு அடிபணிந்து செயல்படுவது போல் அவர் பேசுவது தவறு. மத்திய அரசும், மாநில அரசும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் மாநிலம் வளர்ச்சி பெறும். வண்டிக்கு எவ்வாறு 2' சக்கரங்கள் வேண்டுமோ? அதுபோல தான் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து நட்புறவோடு செயல்பட்டால் தான் தமிழகம் வளர்ச்சி அடைய முடியும்.

 

மேலும் வாக்குறுதிகள், திட்டங்கள் நிறைவேற்ற முடியும். கோதாவரி - காவிரி இணைப்பு திட்டம் மிக சிறப்பான திட்டம். 80,000 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படும் இத்திட்டத்தால் விவசாய வளர்ச்சி பெருகுவதோடு, தமிழகமும் வளர்ச்சி பெறும். கடந்த ஆண்டு நீட் தேர்வில் வெறும் 6 பேர் மட்டும் தான் தேர்வடைந்தார்கள். ஏழை, எளிய மாணவ மாணவிகள் மருத்துவம் படிப்பதற்காக, எதிர்க்கட்சிகளோ, பொதுமக்கள் கோரிக்கை வைக்காத நிலையிலும் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் மருத்துவ கணவை நிறைவேற்றும் வகையில், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு அளித்துள்ளது. இதன் மூலம் 435 ஏழை எளிய மாணவர்கள் மருத்துவம் படிக்க சென்றார்கள். புதிதாக 11 மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட பின்பு, ஆண்டுதோறும் 1650 மருத்துவ மாணவர்கள் பயன்பெற முடியும். அதில் தமிழக அரசு அறிவித்த 7.5 சதவீத ஒதுக்கீட்டில் 600 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அடுத்த வருடத்தில் இருந்து வாய்ப்பு கிடைக்கும். ஏழை எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவ கனவை நிறைவேற்றியது அதிமுக அரசு. அவர்களது கல்வி கட்டணத்தையும் அரசு ஏற்றுக் கொண்டது” இவ்வாறு அவர் பேசினார்.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்கு இயந்திரத்தில் கோளாறு; இன்னும் தொடங்கப்படாத வாக்குப்பதிவு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Voting machines malfunction in 10 polling stations in Cuddalore
கோப்புப்படம்

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடலூரில்  உள்ள 10  வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  அதனால் கடந்த ஒரு மணி நேரத்திக்கும் மேலாக அப்பகுதியில் வாக்குப் பதிவு  தொடங்கப்படாமல் இருக்கிறது. தேர்தல் அதிகாரிகள் மாற்று வாக்குப் பதிவு எந்திரம் மூலம் வாக்குப் பதிவு தொடங்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தாமதமாகும் வாக்குச்சாவடியில் மக்கள் தங்களது ஜனநாயக கடமையாற்ற நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். காலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு தொடங்கப்படாமல் இருப்பதால் மாலை ஒரு மணி நேரம் கூடுதலாக ஒதுக்கப்படுமா என்பது குறித்து தேர்தல் தலைமை அதிகாரி தெரிவிப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.