Skip to main content

திமுகவினரை மிரட்டி அதிமுகவில் இணைய சொல்லும் அமைச்சர் செங்கோட்டையன்... அதிருப்தியான  திமுகவினர்! 

Published on 11/06/2020 | Edited on 11/06/2020

 

dmk



பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் மட்டுமில்லாமல் நீதிமன்றத்திலும் குட்டு வாங்கியது அமைச்சர் செங்கோட்டையன் பொறுப்பில் உள்ள பள்ளி கல்வித்துறை. தேர்வு தவிர்க்க முடியாதது என அவர் சொல்லி வந்த நிலையில், நீதிமன்றம் மற்றும் எதிர்க்கட்சிகளின் அழுத்தம் காரணமாக பொதுத்தேர்வு ரத்து என அறிவித்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.


5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு என புதிய முறையை கொண்டுவர நினைத்தவர்களால் வழக்கமான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வே நடத்த முடியவில்லை என மீம்ஸ்களும் ரெடியாயின. இந்த நிலையில் செங்கோட்டையன் தனது தொகுதியில் மாற்றுக் கட்சிகளை சேர்ந்தவர்களை அதிமுகவில் இணைய வேண்டும் என நேரடியாக மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

8 ந் தேதி காலை திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சுப்பராயன் கோபிசெட்டி பாளையம் வந்திருந்தார். தொடர்ந்து அவர் குள்ளம்பாளையம் ஊராட்சியில் உள்ள நாதிபாளையம் என்ற இடத்தில் 200 மீட்டர் நீளத்திற்கு தார் சாலை அமைக்கும் பணிகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதை அறிந்து அங்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "இந்த தொகுதியின் எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான செங்கோட்டையன் அமைச்சருக்குரிய தகுதியில் நடந்துகொள்வதில்லை. இந்தத் தொகுதியில்தான் ஏராளமான கிராவல் மண், ஆளும் கட்சியினரால் கொள்ளையடிக்கப்பட்டு கடத்தப்படுகிறது. அதேபோல் இங்கு உள்ள குண்டேரிப்பள்ளம் அணையை உயர்த்துவோம் எனக் கூறுகிறார்கள். அணையின் உயரத்தை உயர்த்துவதை விட அணையில் உள்ள சேற்றை வெளியே எடுத்தால் போதும் அணையின் ஆழம் அதிகமாகும்.

 

 

admk



இதையெல்லாம் செங்கோட்டையன் எதையும் செய்யாமல், பிற கட்சிகளைச் சேர்ந்தவர்களை அ.தி.மு.க.வில் இணைய சொல்லி இப்போது மிரட்ட ஆரம்பித்துள்ளார். தி.மு.க.வை சேர்ந்த சில தொழிலதிபர்களை நேரடியாக அ.தி.மு.க.வுக்கு வரவேண்டுமென செங்கோட்டையன் மிரட்டியிருக்கிறார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. ஒரு அமைச்சராக இருப்பவர் மக்களுக்கு பொதுவானவராக இருக்க வேண்டும் அதை விடுத்து விட்டு இப்படி கட்சியில் இணைய சொல்லி மிரட்டுவது எல்லாம் நாகரீகமான செயல் அல்ல. அதேபோல் இந்த தொகுதியில் ஆளுங்கட்சியினர் தலையிட்டு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் நடைபெறாமல் தடைபட்டால், நான் நேரடியாக வந்து போராட்டம் செய்வேன்'' என்றார்.


அமைச்சர் செங்கோட்டையன் அ.தி.மு.க.வுக்கு ஆள் பிடிக்கிறார். அதுவும் தி.மு.க.வை சேர்ந்தவர்களை மிரட்டி கூப்பிடுகிறார் என கம்யூனிஸ்ட் எம்.பி. திருப்பூர் சுப்பராயன் குற்றச்சாட்டு வைத்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுந்தரப்பினரோ, செல்வாக்குடன் தொகுதியில் தொடர் வெற்றி பெறுபவர் எங்கள் அமைச்சர். அதைப் பொறுக்க முடியாமல் வீண் பழி சுமத்துகிறார்கள் என்கிறார்கள்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.