
சென்னை ராயபுரம் மேற்கு மாவட்ட திமுக தொண்டரணி துணை அமைப்பாளர் லெட்சுமி வேலு. இவருடைய கணவர் வேலு. ஆர்.கே.நகர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள கொருக்குப்பேட்டை மன்னப்பன் தெருவில் பழைய இரும்பு, பிளாஸ்டிக் சாமான்கள் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 28.06.2021 திங்கள்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வேலு நடத்தி வரும் இரும்புக்கடை குடோனில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில் சுமார் ரூபாய் 15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. தகவல் அறிந்ததும் ஆர்.கே.நகர் தொகுதி எம்.எல்.ஏ. எபிநேசர் மற்றும் திமுக வடசென்னை வடக்கு மாவட்ட செயலாளர் இளைய அருணா ஆகியோர் லட்சுமி வேலு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

கரோனா நிவாரணமாக ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று (29.06.2021) சென்னை கொருக்குப்பேட்டை ஹெச்.4 காவல்நிலையம் அருகே நடைபெறுகிறது. இந்த விழாவில் தொகுதி எம்.எல்.ஏ. எபிநேசர், எம்.பி. கலாநிதி, மாவட்டச் செயலாளர் இளைய அருணா ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இதற்காக கடந்த ஒருவார காலமாக அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வந்தார் லெட்சுமி வேலு. இந்த நிலையில்தான் அவருடைய கணவர் குடோனில் தீ விபத்து ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தீ விபத்தினால் மனதளவில் சோகமாக இருந்தாலும், எந்தக் காரணம் கொண்டும் விழா ரத்தாகிவிடக்கூடாது, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை நடத்தியே ஆக வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். விழாவுக்கான ஏற்பாடுகளையும் செய்து வருகிறார். தீ விபத்தால் தொழிலில் நஷ்டம் ஏற்பட்ட நிலையிலும் நலத்திட்ட விழாவை நடத்தியே தீரவேண்டும் என்று பணி செய்து வருவதை பார்த்து, நெகிழ்கிறார்கள் உடன்பிறப்புகள்.