Skip to main content

நான் பரம்பரை பணக்காரன்... டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியமில்லை... அமைச்சர் சி.வி.சண்முகத்தின் அரசியல்!

Published on 10/02/2020 | Edited on 10/02/2020

சில மாதங்களுக்கு முன்பு நடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.விற்கு கிடைத்த வெற்றியும் ஜனவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிக்கு கிடைத்த வெற்றியும் விழுப்புரம் மாவட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை கட்சிக்குள் அசைக்க முடியாத சக்தியாக மாற்றியுள்ளது.

அதனால் இப்போதைய அரசியலைவிட வருங்கால அரசியலிலும் கட்சித் தலைமையிலும் தன்னை வலுப்படுத்திக்கொள்ளும் வேலைகளில் இறங்கி விட்டார் சண்முகம்.

இதற்கு அச்சாரமாக மாவட்டம் முழுவதும் இருக்கும் கட்சிப் பதவிகளில் இருப்பவர்களை கடாசி விட்டு, தனது விசுவாசிகளுக்கு கட்சிப் பதவிகளை வாரி வழங்கி வருகிறார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அவைத் தலைவராக இருந்த ராஜரத்தினம், எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர் மாஜி எம்.பி. ஏழுமலை, அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் துரைசாமி, வக்கீல் அணி செயலாளர் கொடுமுடி சேரலாதன், ஐ.டி. விங் மணவாளன், ஒலக்கூர் ஒ.செ.ராஜேந்திரன், விக்கிரவாண்டி ஒ.செ. சேவல்வேலு, செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜ், மரக்காணம் பேரூர் செயலாளர் கணேசன் ஆகியோரின் பதவிகளுக்கு வேட்டு வைத்துவிட்டார் சண்முகம்.
 

admk



மா.அ.த.வாக செஞ்சி கண்ணன், எம்.ஜி.ஆர். ம.செ.வாக எஸ்.பி.ராஜேந்திரன், மா.து.செ.வாக மரக்காணம் கணேசன், மகளிரணி செயலாளராக கிளியனூர் தமிழ்ச்செல்வி, இவர்கள் தவிர மாணவரணி, ஐ.டி. விங், வக்கீல் அணி, விவசாய அணி என அனைத்துப் பதவிகளுக்கும் தனது விசுவாசிகளின் பட்டியலைக் கொடுத்து ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். ஆகியோரின் ஒப்புதலுடன் கடந்த 27-ஆம் தேதி பட்டியலையும் ரிலீஸ் பண்ணிவிட்டார் சண்முகம்.

அதேபோல் விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் வரும் ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து தனது ஆட்களுக்கு பதவிகளை அள்ளி வழங்கி ஆனந்த மடைந்திருக்கிறார் சண்முகம். ஆனால் பதவி இழந்தவர்கள் மத்தியில் ஆங்காரமும் கோபமும் வெடிக்க ஆரம்பித்துவிட்டன. சண்முகத்தால் பதவி பறிக்கப்பட்ட செஞ்சி பேரூர் செயலாளர் பிரித்விராஜனின் தந்தை ரங்கநாதன், நீண்ட நெடுங்காலமாக அ.தி.மு.க.வில் இருப்பவர், வசதி வாய்ப்புகளுக்கும் குறைவில்லாதவர். செஞ்சி பகுதியில் செல்வாக்கு மிக்கவர்.

சமீபத்தில் செஞ்சியிலிருந்து களவாய்—-சேத்துப்பட்டு ஊர்களை இணைக்கும் சாலைக்கான டெண்டருக்கு விண்ணப்பம் போட்டார் ரங்கநாதன். ஆனால் அமைச்சர் சண்முகத்தின் கைங்கர்யத்தால் தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு டெண்டர் வழங்கப்பட்டது. இதனால் கடுப்பான ரங்கநாதன், சமீபத்தில் செஞ்சி அரசு விருந்தினர் விடுதியில் இருந்த அமைச்சர் சண்முகத்திடம் கேட்டபோது, அலட்சியமாகப் பேசினாராம் அமைச்சர்.

 

admk



இதனால் மேலும் உஷ்ணமான ரங்கநாதன், “நான் பரம்பரை பணக்காரன், சாலைப் பணி தரமா இருக்கணும்தான் டெண்டர் போட்டேன். இந்த டெண்டரை எடுத்துதான் சம்பாரிக்கணும்னு அவசியம் இல்லை'' என ஆவேசமாக கூறிவிட்டு வெளியேறி விட்டாராம்.


நாம் விழுப்புரம் நகர சீனியர் ர.ர.ஒருவரிடம் பேசியபோது, "எங்க அம்மா மற்றும் சின்னம்மாவின் ஆசியுடன் டாக்டர் லட்சுமணன் மா.செ.வாகி, ராஜ்யசபா எம்.பி.யுமானார். கட்சிக்குள் அவரின் திடீர் ஸ்பீடால், சண்முகத்தின் ஆதரவாளர்கள் ஏகப்பட்ட பேர் லட்சுமணனை நோக்கி படையெடுக்க ஆரம்பித்தனர். அம்மா மரணம், சின்னம்மா ஜெயில்ல என நிலைமை மாறியதும் சண்முகத்தின் கை ஓங்கியது, போனவர்கள் எல்லாம் திரும்பி வந்தார்கள். விழுப்புரம் தெற்கு மா.செ. குமரகுரு எப்போதுமே எடப்பாடியின் நிழவில் இருப்பவர். ஆனால் சண்முகமோ தன்னை தனித்துக் காட்டவேண்டும் என நினைப்பவர். அமைச்சருக்கு எல்லாமுமாக இருந்து வழிநடத்துவது அவரது அண்ணன் ராதாகிருஷ்ணன் தான்'' என்றார். விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் அமைச்சர் சண்முகத்தின் சடுகுடு அரசியல் ஜரூராக நடக்கிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.