Skip to main content

கண்ணீரில் மிதக்கவிட்ட ஜனங்களின் கலைஞன்!

Published on 22/04/2021 | Edited on 22/04/2021

 

ddd

 

ஒரு புன்னகைக் கவிதையைக் காலத்தின் கைகள், கண்ணீர்த்துளியாக மொழி பெயர்த்திருக்கிறது. கடந்த 15ஆம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில், கரோனா தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட நடிகர் விவேக்... “எல்லோரும் கரோனா மரணத்தில் இருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதற்குத் தயங்காமல் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும்” என்று, ஊடகங்களின் முன்பாக விழிப்புணர்வு வேண்டுகோள் விடுத்தார். அதுதான், அந்தக் கலைஞனின் கடைசி பொதுக்குரல்.

 

16ஆம் தேதி காலையில் எழுந்தபோதே விவேக் மிகுந்த சோர்வாக இருந்திருக்கிறார். வழக்கமான உடற்பயிற்சியை மேற்கொள்ளவில்லை. காலை 10 மணி வாக்கில் லேசான மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. தொடர்ந்து மயக்கம் ஏற்பட்டது. காலை 11 மணியளவில் வடபழனி சிம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் விவேக்.

 

அவருக்கு திடீர் மாரடைப்பும், இதயத்தில் 100 சதவீத அடைப்பும் ஏற்பட்டிருப்பதாகச் சொன்ன மருத்துவர்கள், "கரோனா தடுப்பூசிக்கும் இந்த மாரடைப்புக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை” என்று அறிவித்தனர். விவேக்கிற்கு மாரடைப்பு என்ற தகவல் பரவியபோது எல்லோரிடமும் பதட்டம் தொற்றிக்கொண்டது. அவர் நலம்பெற வேண்டும் என்ற பிரார்த்தனை - விருப்பம் எல்லாவற்றையும் மீறி 17ஆம் தேதி அதிகாலை 4.35-க்கு நினைவு திரும்பாமலேயே அவரது உயிர் பிரிந்தது.

 

தமிழினம் கலங்கியது. ஊடகங்களிலும் சமூக வலைதளங்களிலும் கண்ணீர் அஞ்சலிகள். முதல்வர் எடப்பாடி, திமுக தலைவர் ஸ்டாலின் தொடங்கி... பிரதமர் மோடி, அமித்ஷா வரை தலைவர்கள் பலரும் இரங்கல் செய்திகளை வெளியிட, கரோனாவைப் பற்றிக்கூட கவலைப்படாமல், பொதுமக்களும் விவேக் ரசிகர்களும் திரைப் பிரபலங்களும் அரசியல் கட்சித் தலைவர்களும் பெருந்திரளாகத் திரண்டுவந்து, அந்த உன்னதக் கலைஞனுக்குத் தங்கள் கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

 

‘ஜனங்களின் கலைஞர்’ விவேக், 1961ஆம் ஆண்டு நவம்பர் 19ஆம் தேதி, சங்கரன்கோயில் அருகேயுள்ள பெருங்கோட்டூரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர். மதுரையில் பட்டப்படிப்பை முடித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இளநிலை உதவியாளராக 6 ஆண்டுகள் வேலை பார்த்த நிலையில், இயக்குநர் பாலச்சந்தரின் ‘மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் திரையுலகில் நடிகராக அடியெடுத்து வைத்தார். ‘புதுப்புது அர்த்தங்கள்’ படத்தில் “இன்னைக்கு செத்தா நாளைக்குப் பால்...” என்ற டயலாக் மூலம் பரவலாக அறியப்பட்டவர், அதன்பிறகு கொளுத்திய நகைச்சுவைப் பட்டாசுகள் பலவும் அதிர்வேட்டுகள்தான்.

 

ரஜினி, விஜய், அஜித், சூர்யா என உச்சத்தில் இருக்கும் அனைவருடனும் சேர்ந்து நடிக்கத் தொடங்கினார். சீர்திருத்தக் கருத்துக்களையும், பகுத்தறிவுச் சிந்தனைகளையும் தன் பாணியில் பஞ்ச் டயலாக்காகப் பேசி, திரையரங்குகளைக் கைத்தட்டல்களால் அதிரவைக்கத் தொடங்கினார் விவேக். ‘மின்னலே' படத்தில், லாரியின் முன்புறம் தொங்கவிடப்பட்ட எலுமிச்சம் பழத்தைப் பார்த்து, "உள்ளே எழுநூறு ஸ்பேர் பார்ட்ஸ் இருக்குது. அதுல ஓடாத லாரியாடா.. இந்த எலுமிச்சங்காய்ல ஓடப் போகுது?'’ என்பார் விவேக். இதுபோன்ற அவரது வசனங்களே, அவருக்கு ‘சின்னக் கலைவாணர்' என்ற பட்டத்தைக் கொண்டுவந்து சேர்த்தன. 2009ஆம் ஆண்டு, ‘பத்மஸ்ரீ' விருது ஒரு பூங்கொத்தைப் போல் விழுந்தது. ஏறத்தாழ 500 படங்களுக்கு மேல் நடித்த அவருக்கு, கடந்த ஆண்டு வெளியான ‘தாராள பிரபு’தான் கடைசிப் படமாக அமைந்துவிட்டது.

 

ஆர்மோனியம், வயலின், தபேலா வாசிப்பதிலும் வல்லவரான விவேக், பல குரலில் பேசுவதிலும் திறன் படைத்தவர். திரைப்பட விழாக்களில் நகைச்சுவைக் கவிதைகளையும் அரங்கேற்றி, ஆரவாரத்தை எழுப்பிய பிறவிக் கலைஞர் அவர். தனது ஒரே மகனான பிரசன்னகுமார், 2015இல் டெங்குக் காய்ச்சலில் திடீரென இறக்க, அந்த வலியை விவேக் கடைசிவரை சுமந்துகொண்டே இருந்தார். அதேபோல் அவரது அப்பா இறந்த சில வருடங்களிலேயே அவரது அம்மாவும் மரணமடைய, அடுத்தடுத்த சோகங்களால் விவேக் நிலைகுலைந்தார். மொத்தத் துயரத்தையும் மறைத்துக்கொண்டுதான் அவர் மற்றவர்களைச் சிரிக்கவைத்தார்.

 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்ட விவேக், அவர் நினைவாக மரம் நடுவதைத் தனது திருப்பணியாக மேற்கொண்டார். ஒருகோடி மரக்கன்றுகள் நடுவதை தனது வாழ்நாள் திட்டமாக அறிவித்தார். இதுவரை 33.5 லட்சம் மரக்கன்றுகளை நட்டுப் பெரும்சாதனை புரிந்த அவர், தன் இலக்கை அடையும் முன்பாகவே இயற்கையோடு கலந்துவிட்டார். ஆனாலும், அவரது இறுதி ஊர்வலத்தில், இளைஞர்கள் பலரும் மரக்கன்றுகளை ஏந்திச் சென்றனர்.

 

72 குண்டுகள் முழங்க, காவல்துறை மரியாதையுடன், மேட்டுக்குப்பம் மயானத்தில் விவேக்கின் இறுதிச்சடங்கு நடந்தது. அந்தப் பகுத்தறிவுக் கலைஞனுக்கு, அவரது மகள் தேஜஸ்வினி இறுதிச் சடங்கு செய்ததில், வீட்டிற்குள்ளும் அவர் விதைத்த பகுத்தறிவு, பெருமிதமாய்ச் சுடர்விட்டது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விவேக் இல்லத் திருமணம்; அப்பாவின் கனவை நோக்கி மகள்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
vivek daughter marriage

பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் கடந்த 2021 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு மூன்று குழந்தைகள் இருந்தன. பிரசன்னா குமார், அமிர்த நந்தினி மற்றும் தேஜஸ்வனி. இதில் பிரசன்னா குமார், மூளைக் காய்ச்சல் காரணமாக 2015 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

இந்த நிலையில், மறைந்த விவேக்கின் மூத்த மகளான தேஜஸ்வினிக்கு தற்போது திருமணம் நடைபெற்றுள்ளது. பரத் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட நிலையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பலரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். 

அப்போது மணமக்கள் இருவரும் மரக்கன்றுகள் மற்றும் மூலிகை பூச்செடிகள் நட்டனர். பின்பு வாழ்த்தியவர்களுக்கு மரக்கன்றை பரிசாக அளித்தனர். விவேக், முன்னாள் குடியரசுத் தலைவர் மறைந்த ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் வழியில் கிரீன் கலாம் என்ற திட்டத்தின் மூலம் 1 கோடி மரக்கன்றுகள் நடுவதை கனவாக வைத்திருந்தார் என்பதும் அதில் லட்சக்கணக்கான மரக்கன்றுகளை நட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“விவேக், மனோபாலா, மயில்சாமி மூவருடனான நட்பு”  - அனுபவம் பகிரும் எம்.எஸ். பாஸ்கர்

Published on 24/08/2023 | Edited on 24/08/2023

 

M. S. Bhaskar Interview  -  Vivek - Manobala - Mayilsamy

 

தன்னுடைய திரையுலக மற்றும் வாழ்வியல் அனுபவங்கள் பலவற்றையும் நடிகர் எம்.எஸ். பாஸ்கர் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

நடிகர் விவேக் தமிழ்நாடு தலைமைச் செயலகத்தில் வேலை செய்துகொண்டிருந்தவர். என்னுடைய தம்பியும் அங்கு தான் வேலை செய்துகொண்டிருந்தார். கவிதாலயாவின் படங்களில் விவேக் நடித்தபோது நான் டப்பிங் ஆர்ட்டிஸ்டாக இருந்தேன். அப்போதே அவர் எனக்குப் பழக்கம். நான் வாய்ஸ் கொடுத்துக் கொண்டிருந்தபோது வாய்ஸ் எஃபெக்ட்டுகள் கொடுப்பவராக இருந்தவர் மயில்சாமி. மனோபாலாவும் எனக்கு நீண்ட கால பழக்கம். மயில்சாமி எனக்கு மிக நெருங்கிய நண்பன். மனோபாலாவை நான் அண்ணன் என்று தான் அழைப்பேன். 

 

என் மீது மனோபாலா மிகுந்த அன்போடு இருப்பார். மயில்சாமியை அடிக்கடி நான் சந்திப்பேன். சிவராத்திரி நிகழ்ச்சிக்கு வருகிறாயா என்று மயில்சாமி என்னை போனில் அழைத்தான். அன்று எனக்கு ஷூட்டிங் இருந்ததால் செல்ல முடியவில்லை. திடீரென்று அவன் இறந்துவிட்டான் என்கிற செய்தி வந்தது. என்னால் நம்ப முடியவில்லை. விவேக்கின் மரணமும் அப்படியானது தான். மனோபாலா அண்ணன் கொஞ்சம் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஆனாலும் அவர் இறந்துபோவார் என்று நினைக்கவில்லை. என்னுடைய நெருங்கிய நண்பன் தினகரனும் சமீபத்தில் இறந்தான். 

 

என்னுடைய நண்பர்கள் பற்றியோ, நான் செய்யும் தானங்கள் பற்றியோ எதுவுமே தெரியாதவர்கள் என்னைப் பற்றி செய்யும் விமர்சனங்கள் அவர்களுடைய அறியாமையைத் தான் காட்டுகிறது. நான் பணம் கொடுக்கமாட்டேன் என்பது உண்மைதான். ஒருமுறை சுகர் மாத்திரை வாங்கப் பணம் வேண்டும் என்று உணவகத்தில் ஒருவர் கேட்டார். நான் நூறு ரூபாய் கொடுத்தேன். அதை எடுத்துக்கொண்டு நேராக அவர் டாஸ்மாக் சென்றார். அதிலிருந்து நான் பணமாக யாரிடமும் கொடுப்பதில்லை. மாத்திரை வேண்டுமென்றால் மருந்தகத்துக்கு அழைத்துச் சென்று நானே வாங்கித் தருவேன்.

 

சம்பாதிக்கும் அனைத்தையும் வாரிக் கொடுக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. ஒரு இயக்குநரின் இரண்டு படங்களில் அருமையான காட்சிகள் செய்திருந்தேன். அந்த இரண்டு காட்சிகளையும் அவர் வெட்டிவிட்டார். அது எனக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. தெரிந்த ஒருவரிடம் நம்பி 5 லட்ச ரூபாயை அவருடைய வியாபாரத்துக்காக கொடுத்தேன். இன்று வரை அவர் திருப்பித் தரவில்லை. தரக்கூடிய நிலையில் அவர் இல்லை. கேட்டுக் கேட்டுப் பார்த்து விட்டுவிட்டேன். இனி உஷாராக இருக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வாழ்க்கையில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என்கிற மனநிலைக்கு நாம் வந்துவிட வேண்டும்.