Skip to main content

“தமிழக அரசுடன் கலந்தாலோசித்து இருந்தால் குழப்பத்தை தவிர்த்திருக்கலாம்” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்

Published on 04/04/2023 | Edited on 04/04/2023

 

"Confusion could have been avoided if the Tamil Government had been consulted" Chief Minister's letter to the Prime Minister

 

தமிழ்நாட்டில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். 

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயிகளின் நலன் காக்க நிலக்கரிக்கான ஏல ஒப்பந்த நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வலியுறுத்தியுள்ளார். நிலக்கரி சுரங்கங்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் 2005, கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டம் 1957 ஆகியவற்றின் கீழ் 17வது / 7வது பாகம் ஏலத்தை ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஆணையம் 29 மார்ச் 2023 அன்று அறிவித்துள்ளது. நாடு முழுவதும் ஏலம் விடப்பட்ட 101 வட்டாரங்களில் சேத்தியாத்தோப்பு கிழக்கு, மைக்கேல்பட்டி, வடசேரி ஆகிய 3 பகுதிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

 

இந்த விவகாரத்தில் அறிவிப்பு வெளியிடப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு அரசிடம் ஒப்புதல் பெறப்படவில்லை. மாநில அரசுடன் கலந்தாலோசனையும் செய்யப்படவில்லை. இத்தகைய முக்கியமான விஷயத்தில் மாநிலங்களுடன் எந்த ஆலோசனையும் நடத்தாமல் ஒன்றிய அரசின் நிலக்கரி அமைச்சகம் தன்னிச்சையாக செயல்படுவது துரதிர்ஷ்டவசமானது என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். 3 பகுதிகளும் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ளவை என்றும் வடசேரி மற்றும் சேத்தியாதோப்பு கிழக்கு பகுதிகள் தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்குள் வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும் அக்கடிதத்தில், சட்டத்தின் பிரிவு 4 (1) இன் படி, "பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இரண்டாவது அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள எந்தவொரு புதிய திட்டத்தையும் அல்லது புதிய செயல்பாட்டையும் எந்தவொரு நபரும் மேற்கொள்ளக்கூடாது" என்று வகுக்கப்பட்டுள்ளது. இரண்டாவது அட்டவணையில் உள்ளடக்கப்பட்ட மற்றும் தடைசெய்யப்பட்ட திட்டங்களில் "நிலக்கரி படுகை மீத்தேன், ஷெல் எரிவாயு மற்றும் பிற ஒத்த ஹைட்ரோகார்பன்கள் உள்ளிட்ட எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை ஆய்வு செய்தல், துளையிடுதல் மற்றும் பிரித்தெடுத்தல்" ஆகியவை அடங்கும். தற்போது வெளியிடப்பட்டுள்ள டெண்டர் நிபந்தனைகளில் நிலக்கரி படுகை மீத்தேன் சுரண்டலும் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இந்த ஏல அறிவிப்பு செயல்முறைப்பட்டு வெற்றிகரமான ஏலதாரர் அடையாளம் காணப்பட்டாலும், சுரங்கத் திட்டத்தை மேற்கொள்ள முடியாது என்பதை இது குறிக்கிறது.

 

எனவே, தமிழ்நாட்டில் அடையாளம் காணப்பட்ட வட்டாரங்களைப் பொருத்தவரை இந்த ஏல நடைமுறை வீணான செயலாகும். அறிவிக்கை வெளியிடுவதற்கு முன்பே தமிழ்நாடு அரசுடன் கலந்தாலோசித்திருந்தால் இப்பிரச்சனைகளை தெளிவுபடுத்துவதுடன் ஏலத்திற்கான அறிவிக்கை வெளியீட்டால் ஏற்பட்ட தேவையற்ற குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என்று முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் இதுபோன்ற மாநில அரசின் தொடர்புடைய பொது அறிவிப்புகள் வெளியிடப்படுவதற்கு முன்பு ஒன்றிய அரசு, மாநில அரசில் உள்ள தொடர்புடைய துறைகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்