Skip to main content

பா.ஜ.க. முற்றுகை போராட்டம்!  அட்ஜஸ்ட்மென்ட் ஆர்ப்பாட்டமாக மாறிய கதை!  

Published on 11/09/2023 | Edited on 11/09/2023

 

BJP Condemn dmk

 

சனாதனத்துக்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியையும், அப்போது அமைதியாக இருந்த அமைச்சர் சேகர்பாபுவையும் பதவி விலகச் சொல்லி பாஜக சார்பில், இந்து அறநிலையத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு இந்த மாதம் 11-ந்தேதி போராட்டம் நடத்தப்படும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார் பாஜக தலைவர் அண்ணாமலை. 

 

அதன்படி இன்று முற்றுகை போராட்டம் நடக்கும் என பாஜகவினர் எதிர்பார்த்தனர். ஆனால், முற்றுகைப் போராட்டத்தை, கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றியிருக்கிறார் அண்ணாமலை. வள்ளுவர் கோட்டத்தில் இன்று நடக்கும் இந்த ஆர்ப்பாட்டம் குறித்து பாஜகவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். 

 

இது பற்றி விசாரித்தபோது, ‘பொதுவாக முற்றுகைப் போராட்டம்னு அரசியல் கட்சிகள் அறிவிக்கும். ஆனால், இத்தகைய போராட்டங்களுக்கு போலீசார் அனுமதி கொடுக்க மாட்டார்கள். அதனால், தடையை மீறி முற்றுகையிட முயற்சிப்பர். போலீசார் கைது செய்வர். அதேபோல, முற்றுகையிடும் போராட்டம் அண்ணாமலை அறிவித்த பிறகு, அந்த போராட்டத்திற்கு அனுமதி பெற,  பாஜக அமைப்பு செயலாளர் கேசவவிநாயகம், சென்னை கோட்டப் பொறுப்பாளர் கரு.நாகராஜன் ஆகியோர் காவல் துறையினரை அணுகினர். அனுமதி கிடைக்கவில்லை. 

 

வள்ளுவர் கோட்டத்தில் வேண்டுமானால் ஆர்ப்பாட்டம் செய்து கொள்ளுங்கள் என ஸ்ட்ரிக்டாக தெரிவித்துவிட்டது காவல்துறை. இதை கேசவ விநாயகமும் கரு.நாகராஜனும் அப்படியே ஏற்றுக்கொண்டனர். காவல்துறையினருடன் எந்த வாக்குவாதமும் இவர்கள் செய்யவில்லை. 'முற்றுகைக்கெல்லாம் அனுமதி தரமுடியாது; ஆர்ப்பாட்டம் செஞ்சுக்கோங்க' என போலீஸ் சொன்னதை அண்ணாமலையும் ஒப்புக்கொண்டு விட்டார். அதனால், முற்றுகைப் போராட்டம், கண்டன ஆர்ப்பாட்டமாக மாற்றப்பட்டிருக்கிறது. அண்ணாமலையில் இருந்து கரு.நாகராஜன் வரை எல்லோரும் வாய்ச் சொல்லில்தான் வீரர்களாக இருக்கிறார்கள்’ என்று ஆதங்கப்பட்டனர் பாஜகவினர். 

 

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ‘முற்றுகைப் போராட்டத்துக்கு அனுமதிக்க முடியாது. மீறி நீங்கள் நடத்தினால் எல்லோரையும் கைது செய்து ரிமாண்ட் செய்து விடுவோம். காலையில் கைது செய்து மாலையில் விட்டுவிடுவோம் என்பதெல்லாம் இனி கிடையாது என பாஜக நிர்வாகிகளிடம் எங்கள் அதிகாரிகள் கடுமையாகச் சொல்லிவிட்டனர். ரிமாண்ட் என்றதுமே பாஜகவினருக்கு சப்தநாடியும் ஒடுங்கி விட்டது. ஜெயிலுக்குள் இருக்க அவர்கள் தயாராக இல்லை. 

 

இதனை மனதில் வைத்துக்கொண்டு போலீசாரிடம் பேசிய பாஜக நிர்வாகிகள், 'போராட்டத்தை அண்ணாமலை அறிவிச்சிட்டதினால குறிப்பிட்ட நாளில் நடக்க வேண்டும் சார். அதற்கு ஏதேனும் மாற்று வழி இருக்கான்னு கொஞ்சம் பாருங்க சார்' என கேட்டனர். அதில் மனமிறங்கிய எங்கள் அதிகாரிகள், 'வேண்டுமானால் வள்ளுவர் கோட்டத்தில்  ஆர்ப்பாட்டம் நடத்திக்கோங்க'  என பெரிய மனுசு பண்ணி அனுமதி கொடுத்தனர். இதுதான் வள்ளுவர் கோட்டத்துக்கு மாறிய கதை! ஆக, ஒரு அட்ஜெஸ்மெண்ட் ஆர்ப்பாட்டமாக இது  நடக்கிறது’ என்று விவரித்தனர் போலீசார். 

 

இதற்கிடையே, முற்றுகைப் போராட்டத்தை அட்ஜஸ்ட்மென்ட் ஆர்ப்பாட்டமாக மாற்றிய அண்ணாமலையை சோசியல் மீடியாக்களில் கிண்டலடித்து வருகிறார்கள் நெட்டிசன்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

தேர்தல் பணிமனையில் மோதல்; பாஜகவினர் மீது வழக்குப்பதிவு!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Case against BJP for Election Workshop 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்காக தொடங்கப்பட்ட வாட்ஸ்அப் குரூப்பில் மத்திய சென்னை மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் மூர்த்திக்கும், அண்ணா நகர் வடக்கு மண்டல பாஜக தலைவர் ராஜ்குமாருக்கும் இடையே தேர்தல் பணியில் சுணக்கமாக செயல்பட்டது தொடர்பாக மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மத்திய சென்னை தொகுதி பாஜக தேர்தல் பணிமனையில் நேற்று முன்தினம் (26.04.2024) மூர்த்தியும், ராஜ்குமாரும் ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்தபோது தாக்கிக்கொண்டுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து இருவரும் தனித்தனியாக அளித்த புகாரின் பேரில் அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக இருவரும் நாளை (29.04.2024) நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. மத்திய சென்னை தொகுதியில் உள்ள பாஜக தேர்தல் பணிமனையில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.